
தச்சநல்லூரில் பன்றிகள் குளத்தில் இறங்கி தண்ணீர் குடித்த ஆத்திரத்தில் தொழிலாளியை அடித்து கொன்ற வழக்கில் 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நெல்லை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நெல்லை, தச்சநல்லூர், அழகனேரி பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி என்பவரின் மகன் செந்தில்குமார் (38). இவர் பன்றி வளர்த்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த சுடலை மகன் முருகன் (47) என்பவரும், சுப்பையா மகன் செந்தில்குமார் (45) என்பவரும் சேர்ந்து அங்குள்ள சம்மங்குளத்தில் மீன் வளர்த்தனர். அந்த குளத்தில் செந்தில்குமாரின் பன்றிகள் இறங்கி தண்ணீர் குடித்துள்ளன.
இதனால் அவர்களுக்கு முன்விரோதம் ஏற்பட்டது. இதற்கிடையே அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரும் (43) தனது மனைவியுடன் செந்தில்குமாருக்கு தொடர்பு இருந்ததாக கருதி அவர் மீது முன்விரோதத்துடன் இருந்தார். இந்நிலையில் 2018ம் ஆண்டு செப்.,30ம் தேதி செந்தில்குமார் அழகனேரி தங்கம்மன்கோயில் அருகே சென்ற போது , முனியசாமி, செந்தில்குமார் , விஜயகுமார் உட்பட 5 பேர் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி வளைத்து, அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர்.
இந்த கொலை தொடர்பாக தச்சநல்லூர் போலீசார் முனியசாமி, செந்தில்குமார், விஜயகுமார், மகேந்திரன், தங்கராஜ் ஆகிய 5 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட 3வது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை காலத்தில் மகேந்திரன் என்ற மக்கட்டை, தங்கராஜ் ஆகிய 2 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் இன்று நீதிபதி பன்னீர்செல்வம் முன்னிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் முனியசாமி, செந்தில்குமார், அவரது தம்பி விஜயகுமார் ஆகிய 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையை விதித்து ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், முருகனுக்கு கொலை குற்றத்திற்கு ரூ.1000மும், கூட்டுச்சதி குற்றத்திற்கு ரூ.1000மும், கொலை முயற்சி செய்த குற்றத்திற்கு ரூ.500ம் அபராதமாக விதிக்கப்பட்டது. இதுபோல் செந்தில்குமாருக்கும், அவரது தம்பிக்கும் தலா ரூ.3000 அபராதம் விதிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் சூரசங்ரவேல் வாதாடினார்.