
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே தளபதி சமுத்திரம் பகுதியில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி எட்டு பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் இன்று நிகழ்ந்தது. இந்த நிலையில், அதே பகுதியில் நான்கு வழிச்சாலையில் அதிர்ச்சியூட்டும் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. நான்கு வழிச்சாலையில் இருசக்கர வாகனம் ஒன்றில் சென்ற இருவர், முன்னாள் சென்ற பால் லாரியின் பின்புறத்தைப் பிடித்துக்கொண்டு ஆபத்தான முறையில் பயணித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபரீத பயணம் அப்பகுதியில் இருந்த சில வாகன ஓட்டிகளால் கைப்பேசியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்த வீடியோவில், இருசக்கர வாகனத்தில் இருந்த இருவரும் எந்த பயமும் இல்லாமல் வேகமாகச் செல்லும் லாரியின் பின்புறத்தைப் பிடித்து கொண்டு செல்கின்றனர். இது அவர்களின் உயிருக்கு மட்டுமல்லாமல், சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் செயலாகும்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், நான்கு வழிச்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள இதுபோன்ற காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து உடனடியாக அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். மேலும், இதுபோன்ற விபரீத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.