திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்தவர் சிவ சண்முகவேல் (வயது 63) . இவர், திருநெல்வேலியில் உள்ள ஷாரோன் ஆட்டோ தனியார் நிறுவனத்தில் யமஹா ஃபேஷன் என்ற வாகனத்தினை ரூ. 1, 25,000கொடுத்து வாங்கி உள்ளார்
அப்போது, வாகனத்தில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடியள ப்ளூடூத் பொருத்தப்பட்டுள்ளதாகவும் வாகனம் திருட்டு போனாலும் அல்லது காணாமல் போனாலும் அல்லது வேறு யாராவது எடுத்துச் சென்றாலோ வாகனத்தினை செல்போன் மூலம் டிராக் செய்து கண்டறிய முடியும் என்று அவரிடத்தில் கூறியுள்ளனர். ப்ளூடூத் பொருத்த ரூ. 18,000 கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறியதையடுத்து, அவரும் அதனை செலுத்தியுள்ளார். ஆனால், ப்ளூடூத்தை பலமுறை முயற்சி செய்தும் செல்போனோடு இணைக்க முடியவில்லை. பல்வேறு காரணங்களை கூறி ப்ளூடூத்தை இணைப்பதை காலதாமதப்படுத்தி வந்துள்ளது தனியார் நிறுவனம். இதையடுத்து, ப்ளூடூத்துக்கான கட்டணத்தினை திரும்ப கேட்டுள்ளார் சிவ சண்முகவேல். ஆனால், அந்த நிறுவனம் தர மறுத்து விட்டது
தொடர்ந்து, சிவசண்முகவேல் வழக்கறிஞர் பிரம்மா மூலம் திருநெல்வேலி நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார் . விசாரணை நடத்திய ஆணைய தலைவர் கிளடஸ் டோன் பிளஸ்ட் தாகூர் மற்றும் கனகசபாபதி ஆகியோர் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ரூ.15,000 ப்ளூடூத் கட்டணம் ரூ.18000 வழக்குச் செலவு ரூ. 7,000 சேர்த்து மொத்தம் ரூபாய் 40,000 ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். தவறினால் ஒன்பது சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.










