
அன்பும் அமைதியும் தவழ்ந்த நெல்லைச் சீமையில் கடந்த ஆறு நாட்கள் கருப்பு நாட்களாக விடிந்திருக்கின்றன. எங்கு நோக்கினும் அச்சமும், பதற்றமும், ஆறாத் துயரமுமாய் நெஞ்சைப் பிளக்கும் கொலைச் சம்பவங்கள் அரங்கேறி, ஒட்டுமொத்த மாவட்டத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முன்விரோதம், சொத்துத் தகராறு, பணம் கொடுக்கல் வாங்கல் என அற்ப காரணங்களுக்காக மனித உயிர்கள் மரம் வெட்டுவது போல் சாய்க்கப்பட்ட கோரம் நெஞ்சை உலுக்குகிறது. ஈவு இரக்கமின்றி நடந்தேறிய இந்த நான்கு படுகொலைகளும், "எங்கே செல்கிறது நம் சமூகம்?" என்ற கேள்வியை ஒவ்வொருவர் மனதிலும் ஓங்கி ஒலிக்கச் செய்துள்ளது.
கூடங்குளத்தில் முன்விரோதத் தீ, சேகர் (49) என்ற ஏழை மனிதனின் உயிரைக் குடித்தது. கடந்த 26-ம் தேதி இளைஞர்கள் இருவரால் கல்லால் கொடூரமாகத் தாக்கப்பட்ட அவர், மருத்துவமனையில் மூன்று நாட்கள் உயிருக்குப் போராடி, ஏப்ரல் 29 அன்று நிரந்தரமாகக் கண்களை மூடினார். குற்றவாளிகள் கைதானாலும், ஒரு குடும்பத்தின் தூண் சரிந்துவிட்டது என்பதே பரிதாபத்தின் உச்சம்.
இதேபோன்றதொரு சோகம் பணகுடியிலும் அரங்கேறியது. வெறும் 28,000 ரூபாய் கடன் தகராறு, சந்தனகுமார் (35) என்ற தொழிலாளியின் உயிரைப் பறித்தது. பணத்தைக் கேட்கச் சென்ற கல்லூரி மாணவன் ரெஜிமன் (19), வாக்குவாதம் முற்றி, தன்னைத் தாக்க வந்த சந்தனகுமாரையே அரிவாளால் வெட்டிச் சாய்த்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. கடன் பட்ட நெஞ்சம் கலங்கி நின்றதோ, இல்லை போதையின் உச்சம் விபரீதத்தை நிகழ்த்தியதோ, இறுதியில் ஒரு உயிர் அநியாயமாகப் பறிபோனது. கைது செய்யப்பட்ட மாணவனின் எதிர்காலம் கேள்விக்குறியானது.
மற்றொரு அதிர்ச்சியாக, பொன்னாக்குடியில் ரத்த உறவையே குறிவைத்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. பூர்வீக சொத்துத் தகராறில், அண்ணன் மகனே, சித்தப்பா என்றும் பாராமல் அருணாச்சலம் (47) என்பவரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்றுள்ளான். மண்ணுக்காக மனித நேயத்தை மறந்த இந்த வெறிச்செயல், அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தலைமறைவான கொலையாளியை போலீஸ் தேடுகிறது, ஆனால் போன உயிர் திரும்புமா?
இந்த தொடர் சம்பங்களுக்கிட் ய திசையன்விளை அருகே நடந்த சம்பவம் கொலையல்ல, மனிதம் செத்துப்போனதன் அடையாளம்! இரண்டரை வயதே ஆன பச்சிளம் குழந்தை தர்ஷினி, பெற்ற தாயும் அவரது ஆண் நண்பர்களும் உல்லாசமாக இருப்பதற்கு இடையூறாக இருந்ததாகக் கூறி, மதுவைக் கொடுத்து, அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறாள்! பிஞ்சுக் குழந்தையின் ஓலம் அந்தப் பாதகர்களின் கல் நெஞ்சைக் கரைக்கவில்லையா? இந்தச் சம்பவத்தைக் கேட்கும் எவர் மனதும் கண்ணீரால் கரையாமல் இருக்காது. தாய் உள்ளிட்ட நால்வரும் கைதாகியுள்ளனர், ஆனால் நீதி கிடைத்தால் மட்டும் போதுமா? இது போன்ற அரக்க குணம் கொண்டவர்கள் நம்மிடையே உலவுகிறார்களே!
தொடர்ச்சியாக நடக்கும் இந்தக் கொலைகள், சமூகத்தின் மனசாட்சியை உலுக்குகின்றன. சொத்துக்காகவும், பணத்திற்காகவும், அற்ப சுகத்துக்காகவும் மனித உயிர்கள் மிகச் சாதாரணமாகப் பறிக்கப்படுகின்றன. உறவுகளுக்குள் மரியாதை இல்லை, சட்டத்தின் மீது பயம் இல்லை, மனித நேயம் என்பது மருந்துக்குக் கூட இல்லை என்ற நிலை உருவாகிவிட்டதோ என்ற அச்சம் மேலோங்குகிறது.
குறிப்பாக, இளைஞர்கள் மிக எளிதில் வன்முறையைக் கையில் எடுப்பது எதிர்காலம் குறித்த பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. மதுவும், பொறுப்பற்ற நடத்தையுமே பல கொடூரங்களுக்குக் காரணமாக அமைகின்றன. இந்த அவல நிலையை மாற்ற, காவல்துறையும் பொதுமக்களும் கைகோர்க்க வேண்டியது அவசியமாகிறது.
குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்வதில் காட்டும் வேகத்தை, குற்றங்கள் நடக்காமல் தடுப்பதிலும் காட்ட வேண்டும். ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தி, மக்கள் மனதில் நம்பிக்கையை விதைக்க வேண்டும். சமூக விரோதிகள் மீதும், சட்டவிரோத ஆயுதங்கள் புழக்கத்தின் மீதும் இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமங்களில் நிலவும் பிரச்சனைகளை முன்கூட்டியே அறிந்து, சமரச முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.
அதே சமயம், மக்களே... மனம் மாறுங்கள்! வன்முறை எதற்கும் தீர்வல்ல. பேச்சுவார்த்தை, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல் போன்றவையே அமைதிக்கு வழிவகுக்கும். பிரச்சனைகளை நாமே பேசித் தீர்க்கலாம் அல்லது பெரியவர்களின் உதவியை நாடலாம். அடுத்தவர் உயிரை எடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்பதை உணர வேண்டும். மது போன்ற தீய பழக்கங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆபத்து எனத் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் அளியுங்கள்.
திருநெல்வேலி மீண்டும் அமைதிப் பூங்காவாக மாற வேண்டும். இங்கு சிந்திய ரத்தம் இதுவே கடைசியாக இருக்கட்டும். காவல்துறையும், பொதுமக்களும் கைகோர்த்து, வன்முறைக்கு எதிராகப் போராட வேண்டிய தருணம் இது. சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட்டு, மனித நேயம் தழைத்தோங்கினால் மட்டுமே இது சாத்தியம். இனியும் இது போன்ற கொடூரங்கள் நிகழா வண்ணம் தடுக்க, உறுதியேற்போம்! அமைதி திரும்பட்டும்! மனிதம் வெல்லட்டும்!