15 வயது சிறுவனுக்கு பைக் வாங்கி கொடுத்த தந்தை : பஸ் சக்கரத்தில் சிக்கி பரிதாப பலி

father-who-bought-a-bike-for-a-15-year-old-boy-tragically-dies-after-being-hit-by-a-bus

நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் அருகே நேற்று இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் அரசு விரைவு பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி 15 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் மேலும் ஒருவர் காயமடைந்தார். சிறுவனுக்கு பல்சர் பைக் வாங்கி கொடுத்த தாயாரின் இரண்டாவது கணவரும் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்குளம் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த செந்தில் முருகன் என்பவரது மகன் பழனி குமார் (15) என்பவர் பல்சர் பைக்கில் விஜயநாராயணம் அருகே உள்ள பத்மநாதபுரம் விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே பரப்பாடி சாலோம் தெருவைச் சேர்ந்த பீம்சிங் காமராஜ் (64) என்பவர் ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்கில் வந்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில், அவ்வழியாக வந்த அரசு விரைவு பேருந்தை பழனி குமார் முந்திச் செல்ல முயன்றதாகத் தெரிகிறது.


எதிர்பாராதவிதமாக இரு பைக்குகளும் நேருக்கு நேர் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பழனி குமார், அரசு பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் சிக்கியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பீம்சிங் காமராஜுக்கு காலில் காயம் மற்றும் மார்பு, தோள்பட்டையில் சிராய்ப்புகளுடன் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. விசாரணையில், உயிரிழந்த பழனி குமாருக்கு அவரது தாயார் மணிமேகலையின் இரண்டாவது கணவரான ஏர்வாடி வள்ளுவர் வடக்கு தெருவைச் சேர்ந்த இசக்கிமுத்து (35) பல்சர் பைக் வாங்கி கொடுத்துள்ளார்.

இசக்கிமுத்து சிறுவனுக்கு பைக் வாங்கி கொடுத்ததால் அவரும் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து இன்று புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், விஜயநாராயணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.