
திருநெல்வேலி மாநகர கிழக்கு மாவட்ட காவல்துறை துணை ஆணையர் வினோத் சாந்தாராம் அவர்கள் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மாணவர்களிடையே உரையாற்றியது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த உரையில் அவர் வழங்கிய அறிவுரைகள் மிகவும் ஆழமானதாகவும், இன்றைய இளைஞர்கள் ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டிய பொன்னான கருத்துக்களாகவும் உள்ளன.
துணை ஆணையர் வினோத் சாந்தாராம் அவர்கள் மிகத் தெளிவாகவும், அழுத்தமாகவும் குறிப்பிட்டது என்னவென்றால், "ஆண்ட பரம்பரை" என்று யாருமில்லை. காலங்காலமாக தங்களை ஆண்ட பரம்பரை என்று கூறிக்கொண்டிருந்த பலர் இன்று அடையாளம் தெரியாமல் போய்விட்டார்கள். மாறாக, யார் ஒருவர் கடினமாக உழைத்து, நன்றாகப் படித்து, போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று உயர் பதவிகளில் அமர்கிறார்களோ, அவர்களே இன்றைய சமுதாயத்தில் உண்மையான "ஆண்ட பரம்பரை"யாக மதிக்கப்படுவார்கள்.
தனது சொந்த வாழ்க்கையிலிருந்து நன்றாக படித்து போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று உயர் பதவிகளில் அமர்வதை உதாரணம் காட்டிய துணை ஆணையர், தனது தாத்தாக்கள் மாவட்ட ஆட்சியராகவும், காவல் துறை அதிகாரியாகவும் இருந்ததை பெருமையுடன் குறிப்பிடலாம் என கூறினார் . ஆனால், அந்தப் பெருமை என்பது கடந்த காலத்தின் அடையாளம் மட்டுமே என்றும், இனிவரும் காலங்களில் யார் சொந்த முயற்சியால் உயர் பதவிகளை அடைகிறார்களோ அவர்களே உண்மையான பெருமைக்குரியவர்களாகவும், சமுதாயத்தில் உயர்ந்தவர்களாகவும் கருதப்படுவார்கள் என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.
வெறும் பழம் பெருமைகளை பேசிக்கொண்டும், முன்னோர்கள் சம்பாதித்த சொத்துக்களை வைத்துக்கொண்டு "இது என்னுடையது" என்று கூறிக்கொண்டு திரிவது இன்றைய காலகட்டத்தில் எந்தவிதமான மதிப்பையும் மரியாதையையும் பெற்றுத் தராது . ஒவ்வொரு இளைஞனும் தனது சொந்தக்காலில் நிற்கவும், தனது சொந்த முயற்சியால் முன்னேற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
எனவ, மாணவர்கள் அனைவரும் நன்றாகப் படிக்க வேண்டும், கடினமாக உழைக்க வேண்டும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று உயர் பதவிகளை அடைய வேண்டும் என்பதே துணை ஆணையர் வினோத் சாந்தாராமின் மிக முக்கியமான அறிவுரையாகும். இந்த அறிவுரை வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல, ஒவ்வொரு இளைஞனும் தனது எதிர்காலத்தை வடிவமைத்துக்கொள்ள உதவும் ஒரு வழிகாட்டி என்றால் மிகையல்ல.