20 ஆண்டுகளுக்கு பிறகு, பாபநாச சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் : குவிந்த பக்தர்கள்

after-20-years-kumbabhishekam-at-papanasam-swamy-temple

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள உலகம்மை உடனுறை பாபநாச சுவாமி கோவில் பிரசித்தி பெற்றதாகும். இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இந்த கோவிலில் கடந்த 2005-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (மே 4ம் தேதி ) மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் கடந்த 27-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், இன்று கும்பாபிஷேகம் நடந்தது. இன்று அதிகாலை 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் , பிரதான கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. காலை 7.45 மணிக்கு பாபநாச சுவாமி விமானங்கள் மற்றும் ராஜகோபுரம், பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், 8.10 மணிக்கு சுவாமி மூலஸ்தான மகா கும்பாபிஷேகம், 8.20 மணிக்கு உலகம்மை மூலஸ்தான மகா கும்பாபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.

அதனை தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் மற்றும் வீதி உலா நடைபெறும். இதனால், பாபநாச சுவாமி கோவிலில் இருந்து டானா வரையிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவில் மேல்புறத்திலும் ஏராளமானவர்கள் குவிந்து கோபுர விமானங்களுக்கு செய்யப்படும் சிறப்பு பூஜைகளை கண்டுகளித்தனர்.
கும்பாபிஷேகத்தை காண்பதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நெல்லை மாவட்டம் மட்டுமல்லாது தென்காசி உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்த வண்ணம் இருந்தனர்.

மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில் பக்தர்களின் வசதிக்காக குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் வரும் கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவதற்கும் தனியாக இடம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நெல்லை மண்டல இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி தலைமையில் செயல் அலுவலர் ராஜேந்திரன், தக்கார் மற்றும் உதவி ஆணையர் சுப்புலட்சுமி, ஆய்வாளர் கோமதி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவின்பேரில் அம்பை துணை போலீஸ் சதீஷ்குமார் தலைமையில் 600 போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 100 தற்காலிகமாக கண்காணிப்பு கேமராக்களும், 4 கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.