திருநெல்வேலியில் ரூ. 75 கோடி மதிப்பில் 3 மாடியில் பிரம்மாண்ட நூலகம்: அமைச்சர் வேலு ஆய்வு!

tirunelveli-rs-75-crore-worth-3-storey-huge-library-minister-velu-inspects

தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழர்களின் கல்வி மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, மாநிலத்தில் புதிய நூலகங்களை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் வெற்றிகரமாக கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. திருச்சி மற்றும் கோமைவயில் நூலகங்களின் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில், நெல்லை மாவட்டத்திற்கும் ஒரு பிரம்மாண்ட நூலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பாளையங்கோட்டை பகுதியில் சுமார் மூன்று ஏக்கர் பரப்பளவில், 77 ஆயிரம் சதுர அடியில், மூன்று தளங்களுடன் கூடிய அதிநவீன வசதிகளுடன் இந்த நூலகம் அமையவுள்ளது. இதற்காக தமிழக அரசு 75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. நூலகம் அமையவுள்ள இடத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ. வேலு இன்று( மே 5) நேரில் ஆய்வு செய்தார்.

ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலு, "கல்விக்கு சிறந்த பகுதியாக பாளையங்கோட்டை விளங்குகிறது. நமது முதல்வர் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். அதன் அடிப்படையில் தான் தமிழகத்தின் பல்வேறு நூலகங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. இந்த நிதியாண்டில் முதல்வர் அறிவித்த மூன்று நூலகங்களில் ஒன்று நெல்லையில் அமையவுள்ளது. இந்த பிரம்மாண்ட நூலகத்தில் 250 இருக்கைகள் கொண்ட நவீன ஆடிட்டோரியம், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் மற்றும் பொது மக்கள் படிக்கும் வகையில் விசாவமான அரங்குகள், சிறுவர்களுக்கான தனிப் பகுதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தியேட்டர் மற்றும் கலைஞர் டிஜிட்டல் நூலகம் போன்ற அதிநவீன வசதிகள் இடம்பெற உள்ளன. மேலும், ஐந்து மின் தூக்கி வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.

இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகள் தொடங்கியவுடன், ஓராண்டுக்குள் இந்த பிரம்மாண்ட நூலகம் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் .நெல்லை மாவட்டத்தின் நீண்ட நாள் கோரிக்கையான புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கு ரூ. 160 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. குல வணிகர் புரத்தில் மேம்பாலம் கட்டுவதற்கான நிலம் எடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்குவது குறித்து மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதியுள்ளோம் என்றார்.

மொத்தத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில் அமையவுள்ள இந்த பிரம்மாண்ட நூலகம்,மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் ஒரு அறிவு களஞ்சியமாக திகழ்வதோடு, நகரின் கல்வி மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கு உதவிக்கரமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.