
தமிழகத்தில் பிளஸ் டு தேர்வு முடிவுகள் இன்று (மே 8) வெளியானது.இதில் நெல்லை டவுன் சாப்டர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த முத்து ஸ்ரீ ராஜேந்திரன் என்ற மாணவன் 600 க்கு 597 மதிப்பெண்கள் பெற்று நெல்லை மாவட்டத்திலேயே முதல் இடம் பெற்று சாதனை படைத்துள்ளான்.
அரசு உதவி பெறும் பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவன் என்ற பெருமையையும் பெற்றுள்ளான்.பள்ளி தலைமை ஆசிரியர் அருள்தாஸ் ஜெபக்குமார் அந்த மாணவனை பாராட்டி இனிப்புகள் வழங்கினார்.
இந்த மாணவன் மூன்று பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துள்ளார். முத்து ஸ்ரீ ராஜேந்திரனின் தந்தை மகேந்திரன் திருநெல்வேலி டவுன் பகுதியில் தங்க வேலை பார்த்து வருகிறார். தாயார் பெயர் சண்முகமகராச. முத்து ஸ்ரீராஜேந்திரனுக்கு சக்தி ஆவுடையப்பன் என்ற 8ம் வகுப்பு படிக்கும் சகோதரரும் உள்ளார். மிக எளிய பின்னனி கொண்ட குடும்பத்திலிருந்து வந்த முத்து ஸ்ரீ ராஜேந்திரன் பத்தாம் வகுப்பிலும் 500க்கு 494 மதிப்பெண்கள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. திருநெல்வேலி மாவட்டத்திலேயே அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 597 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் மேற்படிப்புக்காக பொறியியல் படிப்பினை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் முத்து ஸ்ரீ ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.