
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அண்ணாநகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி சுபலட்சுமி. இவர்களுக்கு சுனில்குமார் 17, என்ற பிளஸ் 2 பயிலும் மகனும், யுவாசினி 14, என்ற 9ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். ஆறாண்டுகளுக்கு முன் கிருஷ்ணமூர்த்தி இறந்து விட்டார். சுபலட்சுமி குழந்தைகளை வளர்த்து வந்தார். சமீப காலமாக அவர் இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பாதிப்பு அதிகரித்த நிலையில் 15 நாட்களாக வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டார். இந்நிலையில் கடந்த மார்ச் 3ம் தேதி உடல்நிலை மோசமடைந்து இறந்தார். மகன் சுனில்குமார் வள்ளியூர் கன்கார்டியா பள்ளியில் பிளஸ் -2 படித்து வந்தார். பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியதால் தாய் இறந்த சோகத்திலும் தேர்வுக்கு சென்றார். சுனில் குமார் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 375 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். அவரை சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.