
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வாட்டர் டேங்க் பகுதியில் நேற்று 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. தங்களுக்கு சரிவர சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், இ.எஸ்.ஐ (ஊழியர் அரசு காப்பீட்டு கழகம்), பி.எஃப் (வருங்கால வைப்பு நிதி) போன்ற எந்தவிதமான நலத்திட்ட உதவிகளும் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்கள் கூறுகையில், இது தொடர்பாக ராமன் கோ நிறுவனம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும், அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படுவதாகவும் வேதனை தெரிவித்தனர்.
மேலும், நாங்கள் தினந்தோறும் சுகாதாரமற்ற சூழலில் கடுமையாக உழைக்கிறோம். ஆனால், எங்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில்லை. மேலும், உடல்நலக் குறைவு ஏற்பட்டாலோ அல்லது ஓய்வு பெற்றாலோ கூட எந்தவிதமான பாதுகாப்பும் இல்லை. இ.எஸ்.ஐ மற்றும் பி.எஃப் போன்ற எந்த சலுகையும் எங்களுக்குக் கிடையாது. இதுகுறித்து பலமுறை முறையிட்டும் ராமன் கோ நிறுவனமும் மாநகராட்சியும் எங்களை கண்டுகொள்ளவில்லை," என்றும் அவர்கள் ஆவேசத்துடன் தெரிவித்தனர்.
தற்பொழுது வாட்டர் டேங்க் பகுதியில் தொடர் மறியலில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள், தங்களது கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படாவிட்டால், டவுன் மாநகராட்சி அலுவலகத்தையும் முற்றுகையிடப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
சம்பந்தப்பட்ட ராமன் கோ நிறுவனமும் மாநகராட்சி அதிகாரிகளும் உடனடியாக தூய்மை பணியாளர்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்து, சம்பளத்தையும் நலத்திட்ட உதவிகளையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த போராட்டம் மேலும் தீவிரமடையாமல் தடுக்க அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டியது அவசியமாகிறது. சுகாதாரத்தை பேணி காக்கும் தூய்மை பணியாளர்களின் இந்த நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வருவது குறிப்பிடத்தக்கது.