கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இன்று பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி

Safety-drill-at-Kudankulam-Nuclear-Power-Plant-today

எல்லையில் போர் சூழ்ந்துள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு அரசு சில முக்கிய இடங்களில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகைகளை நடத்த திட்டமிட்டுள்ளது. இன்று (மே 9 ) மாலை 4 மணியளவில் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம், வடசென்னை அனல்மின் நிலையம் அலகு 2 ஆகிய இடங்களில் ச பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை நடைபெற உள்ளது.

இந்த ஒத்திகையின்போது, எதிரிகளின் தாக்குதல் மற்றும் பல்வேறு அவசரகால சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கான தயார்நிலைகள் ஆய்வு செய்யப்படும். மாநில அவசர கால செயல்பாட்டு மையம் இந்த ஒத்திகை பயிற்சியை ஒருங்கிணைக்கும். இந்த ஒத்திகையில் மாவட்ட அதிகாரிகள், மாநில அதிரடிப்படை, ஊர்க்காவல் படையினர், சென்னை பெருநகர காவல்துறை, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை, சாரணர் மற்றும் சாரணியர் இயக்கம், தேசிய சாரணர் இயக்கம், தேசிய சேவை திட்ட தன்னார்வலர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் பங்கேற்கின்றனர்.

இது ஒரு ஒத்திகை மட்டுமே. மற்ற இடங்களில் அனைத்து செயல்பாடுகளும் வழக்கம் போல இயங்கும். இந்த பயிற்சி குறித்து பொதுமக்கள் எவ்வித பதற்றமோ அல்லது அச்சமோ கொள்ளத் தேவையில்லை என்று தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.