
நெல்லை சந்திப்பு பகுதியில் திருமண தகவல் மைய உரிமையாளரை சரமாரியாக வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை, பேட்டை அருகே உள்ள கோடீஸ்வரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (41). இவர் நெல்லை சந்திப்பு, மீனாட்சிபுரம் பகுதியில் திருமண தகவல் நிலையம் நடத்தி வருகிறார். இவரது தகவல் மையத்தில் இளம்பெண் ஒருவர் பணிபுரிந்துள்ளார். அவருக்கு சம்பள பாக்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த இளம் பெண்ணின் உறவினரான மருதூரைச் சேர்ந்த ரத்தினவேல் (25) என்பவர், இன்று( மே 9)விஜயகுமாரின் அலுவலகத்திற்கு சென்று சம்பள பாக்கியை கேட்டுள்ளார்.
அப்போது அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரத்தினவேல், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் விஜயகுமாரின் தலையில் ஓங்கி வெட்டியுள்ளார். இதனால், அலறிய விஜயகுமாரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். இதனைப் கண்ட ரத்தினவேல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
விஜயகுமாருக்கு தலையில் பலத்த வெட்டுக்காயமும், உடலின் பிற பாகங்களிலும் காயங்கள் ஏற்பட்டன. சம்பவம் குறித்து உடனடியாக சந்திப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போ லீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த விஜயகுமாரை மீட்டு, சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு , அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தப்பி ஓடிய ரத்தினவேலை போலீசார் தீவிரமாக தேடி, மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.