
நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியில் பெட்ரோல் பங்க் ரூ. 33 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட விவகாரத்தில் ஒரு பெண், சிறுவன் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் பணகுடியில் புன்னியவாளன்புரத்தில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் ஒன்றில் வள்ளியூரை சேர்ந்த முருகன்(வயது 51) என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக மேலாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 5-ந்தேதி பெட்ரோல் விற்பனை பணம் ரூ.33 லட்சத்தை சற்று தொலைவிலுள்ள வங்கியில் செலுத்துவதற்காக கொண்டு சென்றுள்ளார். அப்போது, அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து ரூ.33 லட்சத்தை பறித்துச்சென்றது. இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். அந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தபோது 3 பேர் கும்பல் அடையாளம் தெரிந்தது. அதில் ஒரு வாலிபர் நாங்குநேரியை சேர்ந்த சுடலைக்கண்ணு என்பவரது மகன் கல்யாணி(வயது 19) என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. கல்யாணியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. அதோடு, அவர் தலைமறைவாகி விட்டடார்.
கல்யாணியுடன் மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 2 வாலிபர்கள் கொள்ளையடித்தது தெரியவந்தது. இதனால் அவர்களை பிடிக்க தனிப்படையினர் மதுரையில் முகாமிட்டனர். இதனிடையே, போலீசார் தங்களை நெருங்குவதை அறிந்த அந்த கும்பல் சேலத்திற்கு தப்பிச்சென்றது. பின்னர், சேலத்தில் இருந்து அவர்கள் ஏற்காடு மலைப்பகுதியை நோக்கி பைக்கில் செல்வதை கண்டுபிடித்த தனிப்படையினர் அவர்களை பின் தொடர்ந்தனர். அப்போது போலீசாரை கண்டதும் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பிச் சென்றனர்.
இந்த தருணத்தில் கீழே விழுந்ததில் இருவருக்கு கை முறிவு ஏற்பட்டது. மற்றொரு வாலிபருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து 3 பேரையும் தனிப்படையினர் சுற்றி வளைத்து பிடித்து நெல்லைக்கு நேற்று இரவு கொண்டு வந்தனர். அவர்களை ஐகிரவுண்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இவர்களிடத்தில் நடந்த விசாரணையில் மற்ற இருவரும் மதுரையை சேர்ந்த திணேஷ்வரன்(26), ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த சரவணன்(24) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.30 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீஸ் பாதுகாப்புடன் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஒரு பெண் , சிறுவன் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.