
திருநெல்வேலி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் இன்று (மே 9) அதிகாலை 4.30 மணி முதல் ஆர். ஓ.பிளான்ட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தண்ணீர் வரத்து தடைப்பட்டதால், டயாலிசிஸ் சிகிச்சை வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள் தினமும் இங்கு சிகிச்சை பெறுகின்றனர். ஆனால், இன்று காலை 5 மணிக்கு ஷிப்ட் அடிப்படையில் வரவிருந்த டயாலிசிஸ் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் போனது. இதனால், வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் ஆங்காங்கே காத்து கிடந்தனர். குறிப்பிட்ட நேரத்தில் டயாலிசிஸ் செய்ய முடியாததால், பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி பாலன் கூறியதாவது. “RO பிளான்ட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தண்ணீர் வரத்து தடைப்பட்டது. அதை உடனடியாக சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தீவிர சிகிச்சை தேவைப்படக்கூடிய நோயாளிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும்” எனத் தெரிவித்தார்.