தமிழகத்தில் முதல் முறை : அங்கன்வாடி குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா

First-time-in-Tamil-Nadu-Graduation-ceremony-for-Anganwadi-children

தமிழகத்தில் முதல்முறையாக திருநெல்வேலியில் அங்கன்வாடி குழந்தைகளுக்கும் பட்டமளிப்பு விழா இன்று நடத்தப்பட்டது.

தமிழக முழுவதும் சுமார் 55 ஆயிரம் அங்கன்வாடி மையங்கள் உள்ளன. மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படும் இந்த மையங்களில் 10 முதல் 30 குழந்தைகள் வரை படிக்கின்றனர் . இரண்டு வயது முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு இங்கு முன் பருவ கல்வி வழங்கப்படுகிறது. முன் பருவ கல்வி முடிந்து முதல் வகுப்புக்கு செல்லும் குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா நடத்த அரசு தரப்பில் முடிவெடுக்கப்பட்டது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தமிழக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் இயக்கக இயக்குனர் மெர்சி ரம்யா உத்தரவிட்டிருந்தார்.


இதையடுத்து, இன்று ( மே 9) தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் முன் பருவ கல்வி முடிந்து செல்லும் குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. திருநெல்வேலி ரெட்டியார்பட்டி மையத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பாளையங்கோட்டை வட்டார குழந்தைகள் நல அலுவலர் ஜெனிஃபா தலைமை வைத்தார். ரெட்டியார்பட்டி ஊராட்சி தலைவர் சந்திரசேகர் பட்டமளிப்பு சீருடையில் வந்திருந்த குழந்தைகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினார். ஐசிடிஸ் மேற்பார்வையாளர் பாலா, கிராம நிர்வாக அலுவலர் பிரமுத்து, ஊராட்சி செயலர் சுபாஷ் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் முருக செல்வி, தங்கம், உதவியாளர் தங்கம் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்கள் பங்கேற்றனர்.