
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கழிவு பேப்பர்களை ஏற்றிக் கொண்டு கல்லூர் பகுதியிலுள்ள பேப்பர் மில்லுக்கு கண்டெய்னர் லாரி ஒன்று நேற்று நள்ளிரவு சென்று கொண்டிருந்தது. அப்போது, சேரன்மகாதேவி ஸ்காட் கல்லூரி அருகே சாலையில் நின்று கொண்டிருந்த டிப்பர் லாரியின் பின்புறமாக கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. கண்டெய்னர் லாரி டிரைவர் காயமடைந்து , கேபினுள் சிக்கிக் கொண்டார். கண்டெய்னர் லாரியின் இடிபாடுகளில் சிக்கிய டிரைவரை 30 நிமிடங்களுக்கு மேலாக போராடி தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். பின்னர், 108 ஆம்புலன்ஸ் மூலம் டிரைவரை நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்தில் காயமடைந்த டிரைவர் தூத்துக்குடி மாவட்டம் வசவப்பபுரம் இந்திரா நகரைச் சேர்ந்த முத்துக்குமார் (46) என்பது தெரியவந்துள்ளது. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.