
திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகேயுள்ள பெருங்காளியாபுரம் கிராமத்தில் கடந்த மே 8ம் தேதி அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்த ஊரைச் சேர்ந்த 60 வயது பெண் ஒருவர் தனது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது, காவல் கிணறு பகுதியைச் சேர்ந்த ஒருவர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், பெண்ணிடமிருந்து இரண்டு பவுன் தங்கச் சங்கிலியையும் பறித்துச் சென்றுள்ளார்.
தகவல் அறிந்தவுடன், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். பின்னர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெறப்பட்டு, வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், வள்ளியூர் துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளியை தேடி வந்தனர்.
தொடர்ந்து, தனிப்படை போலீசார் விரைந்து செயல்பட்டு குற்றவாளியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்கச் சங்கிலியும் மீட்கப்பட்டது.
சம்பவம் நடைபெற்ற சில மணி நேரங்களிலேயே குற்றவாளியை கைது செய்த வள்ளியூர் துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் உள்ளிட்ட தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் பாராட்டினார்.