தாமிரபரணி ஆற்றில் இருந்து சேகரிக்கப்பட்ட டன் கணக்கான துணிகள்: அழிக்க திணறும் அதிகாரிகள்

Tons-of-cloth-collected-from-the-Thamirabarani-River-Officials-struggling-to-destroy-it

தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களால் விடப்படும் கழிவுத் துணிகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தாலும், சேகரிக்கப்படும் இந்தத் துணிகளை பாதுகாப்பாகவும், சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையிலும் அப்புறப்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது.

சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தொடர் முயற்சியின் பலனாக,, பாபநாசம் தலையணை முதல் யானைப்பாலம் வரையிலான சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு கோடை கால தூர்வாரும் மற்றும் தூய்மைப் பணி மே 7ம் தேதி முதல் நடந்து வருகிறது. . இதில் அரசுத்துறை அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இணைந்து பணியாற்றி வருகின்றனர். ஆற்றில் மக்கிப் போகாத பாலியஸ்டர் மற்றும் நைலான் போன்ற துணிகள் அதிக அளவில் சேர்வதால் நீர் மாசுபடுவதுடன், குடிநீருக்கான உறை கிணறுகளிலும் நோய்க்கிருமிகள் பரவும் அபாயம் உள்ளது. மேலும், இந்த துணிகள் நீரின் இயற்கையான சுழற்சியையும், நீர்வாழ் உயிரினங்களையும் பாதிக்கின்றன.

இது குறித்து தன்னார்வலர்கள் கூறுகையில், ஒவ்வொரு வருடமும் எடுக்கப்படும் துணிகள் அனவன்குடியிருப்பு மலைப்பகுதிகளில் குவித்து வைக்கப்படுகிறது. சில நேரங்களில் தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இப்படி எரிப்பதாலும், அப்படியே விடுவதாலும் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட சுமார் பத்து டன் துணிகள் அனவன்குடியிருப்பில் தேங்கியுள்ளது . அவற்றை எப்படி அழிப்பது என தெரியாமல் அதிகாரிகள் திணறுகின்றனர். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை ..
கோவை மாவட்டத்தில் பேரூர் மற்றும் கணியூர் பஞ்சாயத்துகளில் 'இன்சுனரேட்டர்' என்ற கருவி மூலம் கழிவுத் துணிகள் அழிக்கப்படுகிறது. அதே முறையை இங்கும் பின்பற்றினால் இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் . இதுபோன்று துணிகளை எரித்து கிடைக்கும் கழிவுகளில் இருந்து சுற்றுப்புற சூழலை பாதிக்காத பேவர் பிளாக் கற்கள் தயாரிக்கலாம் என்று கூறுகின்றனர்.

எனவே, தாமிரபரணி ஆற்றில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணி வெற்றியடைய சேகரிக்கப்படும் கழிவுத் துணிகளை பாதுகாப்பாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலும் அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் ஒருங்கிணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். துணிகளை யார் சேகரிப்பது- எங்கு கொண்டு செல்வது, எப்படி அழிப்பது என்பது குறித்த தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து, மாவட்ட ஆட்சியர் கண்காணிப்பது அவசியம் என்று மக்கள் கூறுகின்றனர்.