கோடையில் அன்னாசி பழத்தின் பலன்கள் : நெல்லையில் சூடுபிடிக்கும் விற்பனை

Benefits-of-pineapple-in-summer-Sales-are-heating-up-in-tirunelveli

திருநெல்வேலியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், உடலுக்கு குளிர்ச்சியையும் புத்துணர்ச்சியையும் அளிக்கும் அன்னாசி பழங்களின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, திருவட்டாறு, திருப்பரப்பு ஆகிய பகுதிகளில் விளையும் அன்னாசி பழங்கள் நெல்லை நகரின் பல்வேறு பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சரவணன் என்பவர் அன்னாசி பழங்களை ஒரு கிலோ ரூ.40 என குறைந்த விலையில் விற்பனை செய்கிறார். இதனால், பொதுமக்கள் ஆர்வத்துடன் போட்டி போட்டு வாங்கிச் செல்கின்றனர்.

வெயில் காலத்தில் அன்னாசியின் பயன்கள்: கோடை காலத்தில் அன்னாசி பழங்களை உண்பதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன . வெயில் காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறைவது இயல்பானது. அன்னாசியில் அதிகளவு நீர்ச்சத்து இருப்பதால், உடலை நீர் சத்து குறையாமல் வைத்திருக்க உதவுகிறது. அன்னாசி இயற்கையாகவே குளிர்ச்சியானது. இதனை உட்கொள்வதால் உடல் வெப்பம் தணிக்கப்பட்டு புத்துணர்ச்சி கிடைக்கிறது. அன்னாசியில் புரோமலைன் (Bromelain) என்ற நொதி உள்ளது. இது உணவை எளிதில் செரிக்க உதவுகிறது. வெயில் காலத்தில் ஏற்படும் செரிமான பிரச்சனைகளுக்கு இது சிறந்த நிவாரணியாகும். வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்கள் நிறைந்திருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

அன்னாசியில் உள்ள சத்துக்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், பொலிவாகவும் வைக்கவும் உதவுகின்றன.வெயில் நேரத்தில் அன்னாசி சாப்பிடுவது மிகவும் நல்லது. உடலுக்கு மிகவும் நல்லது என்பதால் அனைவருமே சாப்பிடலாம். நெல்லையில் தற்போது அன்னாசி பழங்களின் வரத்து அதிகமாக இருப்பதால், விலை குறைந்துள்ளது. இது அனைத்து தரப்பு மக்களுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.