
மத்திய அரசின் வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு எதிராக மனிதநேய ஜனநாயகக் கட்சி சார்பில் வீரவநல்லூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், இந்திய ராணுவத்தின் போர் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தனர்.
மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாநிலத் தலைவர் மு. தமிமுன் அன்சாரி பங்கேற்கும் இந்த ஆர்ப்பாட்டம், மே 9 ம் தேதி மாலை 6 மணிக்கு வீரவநல்லூரில் நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் தமிமுன் அன்சாரி பேசியதாவது, பாசிசக் கூட்டணி அரசு, சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் வகையில் தொடர்ந்து சட்டங்களை இயற்றி வருகிறது. குறிப்பாக, சமீபத்தில் கொண்டுவரப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்தம், 22 கோடிக்கும் அதிகமான முஸ்லிம் மக்களின் சொத்துக்களைக் கையகப்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. முன்பு வக்ஃப் சொத்துக்களைத் திருடினாலோ அல்லது தவறாகப் பயன்படுத்தினாலோ ஜாமீன் கிடைக்க முடியாத கடுமையான சட்டங்கள் இருந்தன. ஆனால், தற்போது அந்தத் தவறைச் செய்தால் எளிதில் ஜாமீன் கிடைக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இது ஏழை எளிய மக்களுக்காகச் செய்ததாகக் கூறுவது ஏற்புடையது அல்ல. மேலும், முஸ்லிம்களின் நிர்வாக அமைப்புகளில் முஸ்லிம் அல்லாதவர்களை நியமிக்க அரசு கொண்டு வந்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது மற்ற மத ஸ்தலங்களின் நிர்வாக நியமனங்களுக்கு எதிரானது. இந்த சட்டத்தின் அவலங்களை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில், கடந்த ஏப்ரல் 10 முதல் மே 10 வரை ஒரு மாத காலம் நாடு முழுவதும் தொடர் போராட்டங்களுக்கும், பொதுக்கூட்டங்களுக்கும் திட்டமிடப்பட்டிருந்தது.
தற்போது நாட்டில் போர் மேகங்கள் சூழ்ந்திருக்கும் சூழலில், தேசத்தின் ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு, மே 11 முதல் அறிவிக்கப்பட்டிருந்த அனைத்து ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மற்றும் இதர நடவடிக்கைகளை காலவரையின்றி ஒத்திவைக்கிறோம். நாட்டின் ராணுவம் உயர்வான அந்தஸ்தைப் பெற்றுள்ளதாகவும், இந்த நேரத்தில் ராணுவ வீரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் அன்பையும் ஆதரவையும் காட்ட வேண்டியது அவசியம்' என்றார்.
இதன் காரணமாக வீரவநல்லூரில் நடந்த வக்ஃப் சட்டத் திருத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக செல்போன்களை மனித நேய மக்கள் கட்சியினர் ஒளிரச் செய்தனர்.