
நெல்லை சிவந்திபட்டிரோட்டில் உள்ள பைபாஸ் பாலத்தின் இடது புறம் உள்ள சர்வீஸ் ரோட்டில் குப்பைகள், ஹோட்டல் கழிவுகள் இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்ப்படுகிறது.
திருநெல்வேலி மாநகராட்சி 41வது வார்டில் கடந்த மூன்று நாட்களாக குப்பை சேகரிக்கும் வாகனம் பழுதாகி நிற்கிறது. . தெருக்கள் எங்கும் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "மாநகராட்சி முழுவதும் தேங்கும் குப்பைகளை சரியான நேரத்தில் எடுப்பதில்லை. 41-வது வார்டில் கடந்த மூன்று நாட்களாக குப்பை வண்டி பழுதாகி நிற்கிறது. எங்கு பார்த்தாலும் குப்பைகள் காட்சியளிக்கிறத. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குப்பை சேகரிக்கும் பணியை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவனத்திடம் தற்போது சொந்தமாக ஒரு வாகனம் கூட இல்லை . குப்பைகளை எடுக்கும் பணியை தனியார் வசம் ஒப்படைத்ததில் இருந்து நெல்லை மாநகராட்சி கோமா நிலையில் உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் இந்த விஷயத்தில் மெத்தனமாக செயல்படுகிறது.
சிவந்திபட்டி சாலையில் உள்ள பைபாஸ் பாலத்தின் இடதுபுறம் உள்ள சர்வீஸ் ரோட்டில் ஹோட்டல் கழிவுகள் மற்றும் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளை உண்ண வரும் நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்கள் மீது விழுகின்றன. இதனால், விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.
மாநகராட்சி ஆணையாளர் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மாநகராட்சி ஆணையாளர் நகரின் சுகாதாரத்தை பற்றி மறந்து விட்டார். இந்த விஷயத்தில் திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, குப்பை சேகரிக்கும் பணியை சீர் செய்து, நகரின் சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும் . சிவந்திபட்டி பைபாஸ் சர்வீஸ் சாலையில் குப்பை கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.