ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக நெல்லையில் கையெழுத்து இயக்கம்

Signature-campaign-in-Nellai-in-support-of-soldiers

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் போர் பதட்டமான சூழ்நிலையில், இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தையும் வீரத்தையும் போற்றும் விதமாக திருநெல்வேலியில் இன்று (மே 10 ) மதியம் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் எதிரே "சமூகம் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை"யின் சார்பில் முத்துராமன் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில், அனைத்து தரப்பு மக்களும் திரளாகக் கலந்து கொண்டு தங்கள் ஆதரவையும் நன்றியையும் வீரர்களுக்குத் தெரிவித்தனர்.

"நம் இந்திய தேசம் காக்கும், நம் இந்திய மக்கள் காக்கும், நமது இந்திய மானம் காக்கும் தீவிரவாதத்தை வேரறுக்கும் ராணுவ வீரர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும்" என்ற உணர்வுப்பூர்வமான வாசகத்துடன் வைக்கப்பட்டிருந்த பதாகையில், சிறுவர் முதல் பெரியவர் வரை ஆயிரக்கணக்கானோர் கையெழுத்திட்டு ராணுவ வீரர்களுக்கு தங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

ஆட்டோ ஓட்டுநர்கள், பெண்கள், முதியவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என சமூகத்தின் பல்வேறு அடுக்குகளைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் இந்த எழுச்சிமிகு நிகழ்வில் பங்கேற்றனர். "நாங்கள் நிம்மதியாக சுவாசிக்க உங்கள் உயிரை பணயம் வைத்து தீவிரவாதிகளை அழித்து வரும் வீரர்களே, கோடான கோடி நன்றிகளும் வாழ்த்துக்களும் எங்களின் கையெழுத்து மூலம்" என்ற அவர்களின் உணர்ச்சிமிக்க வார்த்தைகள் ராணுவ வீரர்களின் மீது அவர்கள் வைத்திருக்கும் மரியாதையையும் அன்பையும் வெளிப்படுத்தின.

சிறுவர்- சிறுமிகளும் ஆர்வத்துடன் வந்து தங்களது சின்னஞ்சிறு கைகளால் கையெழுத்திட்டு வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். இது, தேசப்பற்று என்பது தலைமுறை கடந்து அனைவரிடமும் ஊறியிருக்கும் ஒரு உன்னதமான உணர்வு என்பதை பறைசாற்றியது.