
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொது செயலாளர் முஜிபூர் ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
''காஷ்மீர் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவிகள் 26 பேர் பலியாயினர். சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு இந்தியர்கள் அனைவரையும் இந்த சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியது. ஈவு இரக்கமற்ற இச்செயலில் ஈடுபட்டோர் மனித குலத்திற்கே எதிரானவர்கள். அவர்கள் சட்டத்தின் படி தண்டிக்கப்பட வேண்டும் என அனைவரும் குரல் எழுப்பி வந்தனர். இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக இச்சம்பவத்துடன் தொடர்புடைய பயங்கரவாதிகளின் முகாம்களை கண்டறிந்து துல்லிய தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. 26 அப்பாவிகளின் உயிரைக் கொன்று குவித்த மனித மிருகங்களை தண்டிக்க இந்திய அரசு முன்னெடுக்கும் நடடிவக்கைகளில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க இயலாது.அதே நேரம் இது இருநாடுகளுக்கு மத்தியிலான முடிவற்ற போராக மாறிவிடக் கூடாது என்பதில் இந்திய அரசு மிகுந்த எச்சரிக்கையுணர்வுடன் இருக்கும் என நம்புகிறோம்.
ஏனெனில் , போரினால் நம்நாட்டிற்கே அதிகளவு இழப்பு ஏற்படும் என்று பல்வேறு நிபுணர்கள் கூறும் கருத்தை புறந்தள்ள முடியாது. அதன் பொருள் ராணுவ வலிமை குறைந்தவர்கள் எனும் பொருளில் அல்ல. நமது ராணுவத்தை குறைத்து மதிப்பிட முடியாது. பாகிஸ்தான் தீவிரவாதத்தாலும் வன்முறையாலும் வளர்ச்சியை இழந்த நாடு. நம் இந்தியா அப்படியல்ல. வெளிநாட்டு முதலீடுகள், ஏற்றுமதி, சுற்றுலாத்துறை என பலவகையிலும் வளர்ச்சியை பெற்றது நம் நாடு. நமது கடின உழைப்பாலும் மதிநுட்பமிக்க நடவடிக்கைகளாலும் வளர்ந்த நாடுகளுடன் எல்லா வகையிலும் போட்டி போடும் அளவு முன்னேற்றத்தை கண்டுள்ளோம்.
இந்த சூழலில் போர் என்பது நம்மை வீழ்ச்சியை நோக்கி தள்ளிவிடக்கூடாது. போர் நடக்கும் நாடுகளில் யாரும் முதலீடு செய்ய முன்வரமாட்டார்கள். ஏற்றுமதிகள் பாதிக்கும். வியாபார மந்த நிலை ஏற்படும். உள்நாட்டு உற்பத்தி பாதிக்கும். எல்லாவகையிலும் நம்மை பின்னுக்கு தள்ளிவிடும்.
ஹமேலும் யுத்தம் என்றாலே அங்கு முதலில் பாதிக்கப்படுவது அப்பாவிகளே. உக்ரைன் – ரஷ்யா, பலஸ்தீன் – இஸ்ரேல் என போர் நடைபெற்ற நாடுகளில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதவை. அப்படியொரு சூழல் உருவாக நம்முடைய நாடும் நமது ராணுவமும் அனுமதிக்காது என தேசத்தின் மீது பற்றுள்ள அனைவரும் நம்புகின்றனர். இதுவரை இந்தியா - பாகிஸ்தான் யுத்தம் துவங்கி விட்டதாக இருநாடுகளும் தெரிவிக்கவில்லை.
நமது நாட்டிற்குள் வந்து நம் மக்களை கொன்று குவித்த கயவர்களை கண்டறிந்து தண்டிக்கும் துல்லிய நடவடிக்கைகளையே இந்திய ராணுவம் மேற்கொள்கிறது. அதற்கான தார்மீக உரிமை நமக்கு உண்டு. இதுவரை நாம் எல்லைமீறவில்லை. பாகிஸ்தான் எல்லைமீறி சென்று நிலைமையை மோசமாக்க வேண்டாம் என்று இந்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. மிகுந்த எச்சரிக்கையுணர்வுடன் நமது இந்திய ராணுவம் இப்பிரச்சனையை கையாள்வதையே இது எடுத்துக் காட்டுகிறது. போர் பதற்றம் அதிகரித்து வரும் இச்சூழலில் எல்லையில் காவல் காக்கும் நம் நாட்டு ராணுவ வீரர்களின் பணி மகத்தானது. அவர்களோடு இந்திய முஸ்லிம்கள் அனைவரும் துணை நிற்பார்கள். முஸ்லிம்கள் என்றாலே தேசப்பற்று இல்லாதவர்கள் என்ற மாயை உருவாக்கப்பட்டுள்ளது. அதனாலேயே சமூக வலைத்தளத்தில் சிலர் முஸ்லிம்களின் தேசப்பற்றை சந்தேகித்து கேள்வி எழுப்புகின்றனர்.
இந்திய நாடு சுதந்திரம் பெற நாடெங்கிலும் போராட்டங்கள் நடைபெற்ற போதே இந்திய முஸ்லிம்கள் யார் பக்கம் என்பதை நிரூபித்து விட்டோம்.
ஆங்கிலேயனை விரட்டியடிக்க எங்கள் முன்னோர்கள் சிந்திய ரத்தம் நாங்கள் யார் பக்கம் என்பதை எடுத்துச் சொல்லும். சுதந்திரத்திற்கு முன் நாட்டை காத்தது போல், தற்போதும் முஸ்லிம் இராணுவ வீரர்கள் உயிரை துச்சமாக மதித்து நாட்டிற்காக களத்தில் நிற்கிறார்கள்.
நாடு இரண்டாக பிரிந்த நிலையில் எங்கள் வீடும் எங்கள் நாடும் இந்தியா தான் என்று உறுதியை வெளிப்படுத்தி இங்கேயே இருந்த முஸ்லிம்கள் இப்போதும் மாறாத அதே தேச பற்றுறுதியுடன் இருக்கின்றோம். பாகிஸ்தான் எல்லைமீறி தாக்குதல் தொடுத்தால் இந்திய மக்கள் அனைவரும் தான் பாதிக்கப்படுவோம். அத்தகைய நெருக்கடியான சூழலில் இந்திய ராணுவத்தின் பக்கமே இந்திய முஸ்லிம்கள் அனைவரும் நிற்பார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.