கஞ்சாவை தடயவியல் ஆய்வுக்கு அனுப்ப தவறிய போலீஸ் : தாழையூத்துவில் போதைப்பொருள் விற்றதாக கைதான 3 பேர் விடுதலை

police-fail-to-send-cannabis-for-forensic-analysis-3-arrested-released

நெல்லை மாவட்டம் தாழையூத்து காவல் நிலைய போலீசார் கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் தேதி செல்வம் நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சோமு, மகேந்திரசெல்வம் மற்றும் சோமுக்குமார் ஆகிய 3 பேரை கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்தனர். இவர்கள், விற்பனைக்காக 230 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக காவல்துறையினர் குற்றம் சாட்டினர். மேலும், சிறுவர்களுக்கு கஞ்சா விற்றதாகவும் காவல்துறை தரப்பில் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு நெல்லை 3வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், நீதிபதி விஜயராஜ்குமார் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி தனது தீர்ப்பில் கூறியதாவது: இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் அளித்த வாக்குமூலங்கள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளன. கஞ்சா கைப்பற்றப்பட்ட விதம் குறித்து காவல்துறையினர் அளித்த விளக்கங்களும் தெளிவற்றதாக இருக்கின்றன. இந்த வழக்கில் சிறுவர்கள் சாட்சியங்களாக சேர்க்கப்படவில்லை. அவர்களுக்கு யார் கஞ்சா விற்றார்கள்? என்பதற்கான நம்பகமான ஆதாரங்களையும் அரசு தரப்பு சமர்ப்பிக்கவில்லை. மிக முக்கியமாக, கைப்பற்றப்பட்ட கஞ்சாவை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பாதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

கைப்பற்றப்பட்ட பொருள் கஞ்சாதான் என்பதை அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்த தடயவியல் அறிக்கை அவசியம். இந்த வழக்கில் அரசு தரப்பு அந்த அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிவிட்டது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகள்தான் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க அரசு தரப்பு தவறி விட்டது. இதன் காரணமாக, இந்த நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரையும் விடுதலை செய்கிறது' என்று தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் ஏழு சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். கைப்பற்றப்பட்ட கஞ்சாவும் நீதிபதி முன் காட்டப்பட்டது. எனினும், நீதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை. இதன் காரணமாக, குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் விடுதலை பெற்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை மேல்முறையீட்டு கால அவகாசம் முடிந்த பிறகு அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.