
யாக்கோபுரம் பஞ்சாயத்து அலுவலக வன்முறை வழக்கில் போலீஸ் முறையான விசாரணை மேற்கொள்ளவில்லை என்று கருதுவதாக கூறி 66 பேரை நெல்லை நீதிமன்றம் வீடுதலை செய்து உத்தரவிட்டது.
நெல்லை, பழவூர், சிதம்பரபுரம் - யாக்கோபுரம் பஞ்சாயத்து தலைவராக இருந்த சுயம்பு அளித்த புகாரின் பேரில், 2013ம் ஆண்டு ஜன., 6ம் தேதி, பஞ்சாயத்து அலுவலகத்தில் சிலர் அத்துமீறி நுழைந்து பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 73 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், 7 பேர் இறந்துவிட்டனர். மீதமுள்ள 66 பேர் மீதான விசாரணை நெல்லை மாவட்ட முதலாவது கூடுதல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது.
நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பளித்தார். தீர்ப்பில், அரசுத் தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சியம் அளித்ததும், நேரில் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்களில் முரண்பாடுகள் இருந்தது என்று குறிப்பிட்டார். மேலும், நீதிபதி கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் என்ன செய்தனர்? என்று சரியாக குறிப்பிட போலீஸ் தவறி விட்டது. மேலும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதிலும், நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதிலும் காலதாமதம் ஏற்பட்டதற்கான காரணத்தை அரசுத் தரப்பு விளக்கவில்லை. சேதமடைந்ததாக கூறப்படும் பொருட்கள் முதல் தகவல் அறிக்கயில் குறிப்பிடப்படவில்லை என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார். முக்கிய சாட்சிகளை விசாரிக்காததும், சேதமடைந்ததாக கூறப்படும் பொருட்களின் புகைப்படம் சம்பவ இடத்தில் எடுக்கப்பட்டதா? என்பதற்கான ஆதாரம் இல்லாததும் அரசுத் தரப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த காரணங்களால், குற்றம் சாட்டப்பட்ட 66 பேரையும் விடுவிக்கிறேன் என்று தீர்ப்பளித்தார்.
----