
திருநெல்வேலி மாவட்டம், ராமையன்பட்டி அருகே உள்ள சிவாஜி நகரில் நேற்று (ஜூன் 8, 2025) நிகழ்ந்த சாலை விபத்தில், ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் உயிரிழந்தார்.
சாலையை கடக்க முயன்றபோது பரிதாபம்
சிவாஜி நகர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், நேற்றிரவு 7.30 மணியளவில் சாலையைக் கடக்க முயன்றபோது, திருநெல்வேலியில் இருந்து சங்கரன்கோவிலுக்குச் சென்ற அரசுப் பேருந்து ஒன்று அவர் மீது மோதியது. மோதிய வேகத்தில் பேருந்து நிலைதடுமாறி அருகிலுள்ள பள்ளத்திற்குள் இறங்கியது. இந்த விபத்தில் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பொதுமக்கள் ஆவேசம், மறியல்; அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு
விபத்து குறித்து அறிந்த சிவாஜி நகர் பகுதி மக்கள், ஆத்திரமடைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மானூரில் இருந்து திருநெல்வேலி நோக்கி வந்த அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். அப்பகுதியில் அடிக்கடி அரசுப் பேருந்துகள் அதிவேகமாகச் செல்வதால் விபத்துகள் ஏற்படுவதாகவும், இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.
பொதுமக்களின் சாலை மறியலால், திருநெல்வேலியில் இருந்து சங்கரன்கோவிலுக்கும், சங்கரன்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கும் செல்லும் போக்குவரத்து முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டது.
தொடரும் உயிரிழப்புகள், பொதுமக்கள் கோரிக்கை
கடந்த மூன்று நாட்களில் மட்டும் திருநெல்வேலி மாநகர மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஆறு பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். இது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தின் அருகே ஆம்னி பேருந்துகள் சாலையிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்வதாலும் விபத்து அபாயம் நீடிப்பதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
"சாலைப் போக்குவரத்தை உடனடியாக போக்குவரத்துத் துறையும் மாவட்ட நிர்வாகமும் சீரமைத்து ஒழுங்குபடுத்திட வேண்டும்" என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விபத்து குறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த செல்வராஜின் உடல் கூராய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் நான்கு சாலை சந்திக்கும் பல்வேறு இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் அகற்றப்பட்டு, ரவுண்டானாக்கள் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.