மூலைக்கரைப்பட்டி அருகே கிணற்றில் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் கருடாழ்வார் சிலை கண்டெடுப்பு: திருட்டுக் கும்பல் வீசிச்சென்றதா எனப் போலீசார் விசாரணை!

A-statue-of-Aimpon-Garudazhwar-worth-several-crores-of-rupees-found-in-a-well-near-Mookakaraipatti

திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அருகே கிணற்றை தூர்வாரும் பணி நடந்தபோது, பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழமையான ஐம்பொன்னாலான கருடாழ்வார் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சிலையை திருட்டுக் கும்பல் கிணற்றில் வீசிச் சென்றதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிணறு தூர்வாரும் பணியின்போது சிலை!

மூலைக்கரைப்பட்டி அருகே அரியகுளம் பஞ்சாயத்துக்குட்பட்ட அம்பலம் கிராமத்தில் பிள்ளையார் கோவில் அருகில் ஊர் பொதுக்கிணறு ஒன்று உள்ளது. சுமார் 50 அடி ஆழம் கொண்ட இந்தக் கிணற்றில் தற்போது குறைந்த அளவே தண்ணீர் இருந்ததால், யூனியன் பொதுநிதி மூலம் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக, கிணற்றில் இருந்த தண்ணீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டு, அடியில் தேங்கியிருந்த சேறு அகற்றப்பட்டது.

பழங்கால ஐம்பொன் சிலை கண்டெடுப்பு

கிணற்றின் அடியிலுள்ள சேறை அகற்றும் பணியின்போது, சுமார் 1.5 அடி உயரம் கொண்ட ஐம்பொன்னாலான கருடாழ்வார் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. மிகவும் பழமையான இந்தச் சிலையின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, நாங்குநேரி வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், யூனியன் ஆணையாளர் யமுனா மற்றும் பிற அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஐம்பொன் சிலையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர், இந்தச் சிலை தாலுகா அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

சிலை கண்டெடுப்பு;போலீஸ் விசாரணை

இச்சம்பவம் தொடர்பாக மூலைக்கரைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பழங்கால ஐம்பொன்னாலான கருடாழ்வார் சிலையை ஏதேனும் கோவிலில் இருந்து திருடி வந்த கும்பல், காவல்துறையினரிடம் சிக்காமல் இருப்பதற்காக கிணற்றில் வீசிச் சென்றார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கும், தொல்லியல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மூலைக்கரைப்பட்டி அருகே அரியகுளத்தில், அரிய சிலை கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.