
நெல்லை அருகே குடும்பத் தகராறு காரணமாக மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேட்டை ரயில் நகரை அடுத்த காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவருடைய மனைவி இசக்கியம்மாள் (வயது 27). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
பாஸ்கர் மீது பல்வேறு கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, கஞ்சா வழக்கு உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த பாஸ்கர், தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள உடையார்குளத்தில் வசித்து வந்துள்ளார்.
நேற்று, தனது மனைவியைப் பார்ப்பதற்காக பாஸ்கர் காந்தி நகருக்கு வந்துள்ளார். அப்போது, வீட்டில் கணவன்-மனைவி இடையே திடீரென குடும்பப் பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாஸ்கர், வீட்டில் இருந்த அரிவாளால் இசக்கியம்மாளின் தலை, கழுத்து, கை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இசக்கியம்மாளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்துள்ளனர். மேலும், பேட்டை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இசக்கியம்மாளை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட பாஸ்கரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.