கூடங்குளம் அருகே இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து கீழே பாய்ந்ததில் இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நண்பர் படுகாயமடைந்தார்.
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் பேரூராட்சிக்குட்பட்ட யாதவர் தெருவைச் சேர்ந்த சுப்பையாவின் மகன் முத்துக்கண்ணன். இவர் தனது நண்பரான ஆறுமுகம் என்பவருடன் தனது இருசக்கர வாகனத்தில் கூடங்குளம் சாலையில் சென்று கொண்டிருந்துள்ளார். அங்குள்ள, உள்ள ஒரு பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தபோது, திடீரென இரு சக்கர வாகனத் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், நிலைதடுமாறிய வாகனம், பாலத்தின் அடியில் நேரடியாகப் பாய்ந்து விழுந்தது.
இந்த கோர விபத்தில், தலையில் பலத்த காயம் ஏற்பட்ட முத்துக்கண்ணன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.ஆறுமுகம், பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். இந்த சம்பவத்தை, அந்த பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவர் நேரில் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் கூடங்குளம் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கூடங்குளம் காவல்துறையினர், உயிரிழந்த முத்துக்கண்ணனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயங்களுடன் கிடந்த ஆறுமுகத்தை மீட்டு, முதலுதவிக்காக கூடங்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இந்த துயரச் சம்பவம் முத்துக்கண்ணனின் குடும்பத்தாரையும், யாதவர் தெரு பகுதி மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.










