திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து அருகிலுள்ள ராஜவல்லிபுரத்தில், சுமார் 3,000 பனை மரங்கள் சூழ்ந்த பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகளிடம் பேசியபோது, தாமிரபரணி ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள ஆயிரக்கணக்கான பனை மரங்கள் சூழ்ந்த இந்த இடத்திற்கு அருகே உள்ள டிரான்ஸ்பார்மர் இருந்து ஏற்பட்ட ,தீப்பொறி பனை மரங்கள் மீது பட்டதால், தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். இதனால்,பலத்த காற்று வீசி வருவதால், தீ வேகமாகப் பரவி நூற்றுக்கணக்கான பனை மரங்களை எரிந்து கொண்டிருக்கின்றன என்றும் கூறுகின்றனர்.
இதையடுத்துஇ திருநெல்வேலி, பாளையங்கோட்டை, கங்கைகொண்டான், மற்றும் தாழையூத்து ஆகிய பகுதிகளில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 25 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், கடந்த 2 மணி நேரத்திற்கும் மேலாகப் பரவி வரும் இந்த தீயை அணைக்கும் முயற்சியில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தீ விபத்து ஏற்பட்ட இடம் முழுவதும் தற்போது பரபரப்பாகக் காணப்படுகிறது. அருகில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.










