முதல்வரின் தங்கை , 2 அமைச்சர்கள் : வீட்டுமனைக்காக தவிக்கும் தூத்துக்குடி செய்தியாளர்கள்

thoothukudi-journalists-still-protest-for-concession-housing-land

சலுகை விலை வீட்டு மனை இதுவரை வழங்கப்படாததை கண்டித்து தூத்துக்குடியில் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தூத்துக்குடி மாவட்ட பத்திரிகையாளர்கள் நீண்டநாள்களாக சலுகை விலை வீட்டு மனை வழங்க கோரிக்கை விடுத்திருந்தனர். கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பத்திரிகை மற்றும் ஊடகத்துறையினருக்கு தமிழக அரசின் சலுகை விலை வீட்டுமனை நான்கு கட்டங்களாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தூத்துக்குடி நகரை சேர்ந்த பத்திரிகை மற்றும் ஊடக துறையினர் கடந்த 30 வருடமாக கோரிக்கை விடுத்தும் பலன் இல்லை. இது தொடர்பாக, முதலமைச்சர் முதல், கனிமொழி எம்.பி மற்றும் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ஆர் ராதா கிருஷ்ணன், சாமிநாதன் உள்ளிட்ட பலரிடம் மனு அளித்தும் முடிவு எட்டப்படவில்லை.

இதனால், தமிழக அரசின் பாராமுகத்தை கண்டித்து தூத்துக்குடி பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் இன்று (அக் 23) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வந்தவர்களை சங்க செயலாளர் மோகன்ராஜ் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி பிரஸ் கிளப் மூத்த உறுப்பினரும் சங்கத்தின் கௌரவ ஆலோசகருமான அருண், தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் சங்க தூத்துக்குடி மாவட்ட தலைவர் முருகன், பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்பு தலைவர் பிரான்சிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பத்திரிகையாளர்கள் கருப்பு உடை அணிந்தும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் சலுகை விலை வீட்டுமனை பட்டா விரைந்து வழங்கிட வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் அதிமுக கழக வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்ல பாண்டியன் கலந்து கொண்டு பேசுகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் கவனத்துக்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டு, அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.

READ MORE ABOUT :