தந்தைக்கு தெரியாமல் லண்டனில் படித்த நெல்லை மாணவி காதல் திருமணம் : பதிவு செய்த போது மோதல்

nellai-student-who-studied-in-london-got-married-without-her-father-s-knowledge

லண்டனில் படித்து வந்த இளம்பெண்ணை, நெல்லையைச் சேர்ந்த அவரது காதலன் கோவைக்கு வரவழைத்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இன்று (அக்.30) நெல்லையில் திருமணத்தைப் பதிவு செய்ய முயன்றபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் காதலனின் தந்தை, சித்தப்பா ஆகியார் காயமடைந்துள்ளனர்.

நெல்லை பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் இசக்கி பாண்டி. இவரும், வசதியான குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், பெண்ணின் வீட்டார் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, பெண்ணின் குடும்பத்தினர், அவரை மேல்படிப்பிற்காக லண்டனுக்கு அனுப்பி வைத்துள்ளனர். எனினும், இசக்கி பாண்டியும் அந்தப் பெண்ணும் செல்போன் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்பில் இருந்துள்ளனர். இதனிடையே, பெண்ணுக்கு அவரது வீட்டில் வேறு திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளன.

இதையடுத்து, காதலனின் திட்டப்படி அந்தப் பெண் லண்டனில் இருந்து விமானம் மூலம் மும்பை வந்து, அங்கிருந்து கொச்சி விமான நிலையம் வந்துள்ளார். அங்கு காத்திருந்த இசக்கி பாண்டியின் உறவினர்கள், காதல் ஜோடியை காரில் கோவைக்கு அழைத்து வந்துள்ளனர். கோவையில் சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கோவையில் திருமணத்தைப் பதிவு செய்ய முயன்றபோது, பெண்ணின் உறவினர்கள் அங்கு திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தது. பெண்ணின் உறவினர்களிடமிருந்து அச்சுறுத்தல்கள் இருந்ததால், கோவை போலீசார் பலத்த பாதுகாப்புடன் காதல் ஜோடியை சொந்த ஊரான நெல்லைக்கு அனுப்பி வைத்தனர்.

கோவையில் , ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்ட நிலையில், இன்று நெல்லையில் அந்தத் திருமணத்தைப் பதிவு செய்வதற்காக இசக்கி பாண்டி தனது உறவினர்களுடன் சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த பெண்ணின் வீட்டாருக்கும், இசக்கி பாண்டி தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த தகராறு மோதலாக மாறியது. இதில் காயமடைந்த இசக்கி பாண்டியின் தந்தை செல்வம் அவரது சித்தப்பா மணிகண்டன் ஆகிய இருவரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து நெல்லை மாநகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

என் மகள் 18 வயது குழந்தை - பெண்ணின் தந்தை கண்ணீர்

இதற்கிடையே, பெண்ணின் தந்தை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

"நான் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவன். என் மகளுக்கு 18 வயது முடிந்து இரண்டு நாட்கள்தான் ஆகிறது. அவளை லண்டனில் படிக்க வைத்திருந்தோம். 18 வயது பூர்த்தியான உடனே, 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் என் மகளை அங்கிருந்து கடத்தி வந்துவிட்டார். இன்று அவர்கள் என் மகளை பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து, திருமணம் செய்து வைக்க குடும்பத்துடன் நிற்கிறார்கள். நான் என் மகளைக் கண்ணில் காட்டுமாறு கேட்கிறேன், ஆனால் அவர்கள் காட்ட மறுக்கிறார்கள். அந்த இளைஞர் ஏற்கனவே பல பெண்களின் வாழ்க்கையைக் கெடுத்துள்ளார். அதற்கான வீடியோ ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. பாதிக்கப்பட்ட பிற பெண்களே இந்த ஆதாரங்களை என்னிடம் கொடுத்தனர். என் மகளை ஏதோ வீடியோ எடுத்து மிரட்டி, அவளை அடக்கி வைத்திருக்கிறார்கள். அவள் 18 வயது குழந்தை. தயவுசெய்து என் மகளைப் பார்க்கவும், மீட்கவும் உதவி செய்யுங்கள். என்று தெரிவித்துள்ளார்.

அந்த தந்தை , அந்த இளைஞர் மற்ற பெண்களுடன் இருப்பதாகக் கூறப்படும் சில புகைப்படங்களையும் ஆதாரமாகக் காட்டினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

READ MORE ABOUT :