உயிருக்கு அச்சுறுத்தல்:கொலை செய்யப்பட்ட நெல்லை பேராசிரியரின் மனைவி பகீர் புகார்!

life-threat-the-wife-of-the-murdered-nellai-professor-makes-a-shocking-complaint

திருநெல்வேலியில் கடந்த 2018-ஆம் ஆண்டு கூலிப்படையால் படுகொலை செய்யப்பட்ட தனியார் கல்லூரி பேராசிரியர் செந்தில் குமாரின் மனைவி அனுசுயா (35), தனது குடும்பத்தினருக்கு சாட்சி பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உடனடியாக போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும், நெல்லை மாநகர காவல்துறை பாதுகாப்பு வழங்கத் தாமதிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அனுசுயா கூறுகையில், “எனது தந்தை ராஜ்குமாருக்கும், பாலமுருகன் என்பவருக்கும் இடையே நிலத் தகராறு இருந்தது. இது தொடர்பாக எனது தந்தை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த நிலையில், பாலமுருகனுக்கு ஆதரவாக பிரபல ரவுடி ராக்கெட் ராஜா எனது தந்தையை மிரட்டி வழக்கை திரும்பப் பெறுமாறு வற்புறுத்தினார். அதற்கு எனது தந்தை மறுக்கவே, ஆத்திரமடைந்த மர்ம கும்பல் எங்களது வீட்டிற்குள் புகுந்து எனது தந்தையைத் தேடியது. அவர் அங்கு இல்லாததால், எனது கணவர் செந்தில் குமாரை அந்த கும்பல் கொடூரமாகக் கொலை செய்தது. இந்த வழக்கு தொடர்பாக, எதிரிகளிடமிருந்து எங்களுக்குத் தொடர்ந்து மறைமுக மிரட்டல்கள் வருகின்றன. இதனால் சாட்சி பாதுகாப்பு திட்டத்தின் கீழ் எங்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி கடந்த டிசம்பர் 16, 2025 அன்று விண்ணப்பித்திருந்தோம். சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரை கிளை உயர் எங்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும் காவல்துறை பாதுகாப்பு வழங்க மறுத்து வருகிறது. உரிய பாதுகாப்பு இல்லாமல் நீதிமன்றத்தில் ஆஜராக எங்களுக்கு அச்சமாக இருக்கிறது,” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் என். மணிவண்ணன் கூறுகையில், “ராஜ்குமார் நீதிமன்ற விசாரணைக்காக ஆஜராகும்போது அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும். ஆனால், ராஜ்குமார் மீது ஏற்கனவே சில குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அவருக்குத் தனியாக வீட்டிலேயே ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு (Armed Police Protection) வழங்க முடியாது,” என்று விளக்கமளித்துள்ளார்.

பேராசிரியர் செந்தில் குமார் கொலை வழக்கு திருநெல்வேலியில் இருந்து மதுரை வன்கொடுமை தடுப்புச் சட்டச் சிறப்பு நீதிமன்றத்திற்கு (SC/ST Act Special Court) மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் திங்கள்கிழமை (ஜனவரி 5) நடைபெற உள்ளது.

READ MORE ABOUT :