நெல்லையில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் தொடக்கம்

distribution-of-tokens-for-the-pongal-gift-begins-in-nellai

பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பொதுமக்கள் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதில் அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, முழு நீளக்கரும்பு மற்றும் ரூ.3 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக டோக்கன்கள் வினியோகம் செய்யும் பணி இன்று முதல் தொடங்கி உள்ளது. நெல்லை மாவட்டம் முழுவதும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கு, கூட்டுறவுத்துறை மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு கடைகள் என மொத்தம் உள்ள 796 கடைகளில் இருந்தும் ஊழியர்கள் இன்று வீடு வீடாக டோக்கன் கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் இலங்கை தமிழர் குடியிருப்புகள் உள்பட மொத்தம் 5 லட்சத்து 1,790 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த பணி இன்றும், நாளையும் என 2 நாட்களில் நடந்து முடிந்துவிடும் . வருகிற 8-ந்தேதி முதல் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரேஷன் வேஷ்டி- சேலை உள்ளிட்டவை வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதல்கட்டமாக இன்று மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின்கீழ் நடைபெறும் முதியவர்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்ட பயனாளிகளுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டது. டோக்கனில் எந்த தேதியில், எந்த நேரத்தில், எந்த பயனாளிக்கு தொகுப்பு வழங்கப்படும் என்ற விபரங்கள் இடம் பெற்றுள்ளது. நாளொன்றுக்கு காலை மற்றும் பிற்பகலில் தலா 200 முதல் 300 கார்டுகள் வரையிலும் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . கூட்ட நெரிசல் ஏற்படும் கடைகளில் போலீஸ் பாதுகாப்புடன் பரிசு தொகுப்பு வழங்கிட ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

READ MORE ABOUT :