கலிபோர்னியாவில் பெரியாரின் 140-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

by Isaivaani, Sep 26, 2018, 08:43 AM IST

சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியிலுள்ள பல்வேறு முற்போக்கு அமைப்புக்கள் பெரியார் ஈ.வே.ராமசாமி அவர்களின் 140-வது பிறந்த நாள் விழாவை கடந்த சனி செப்.22, 2018 அன்று பெரியவர்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுடன் சுமார் 80-க்கும் மேற்பட்டோர் கலிஃபோர்னியாவின் கூப்பேர்டினோ நகரில் கொண்டாடினர்.

இந்தியாவின் மிகச்சிறந்த சமூக சீர்திருத்தக்கார்களில் ஒருவரான தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு, சுயமரியாதை, பெண்ணுரிமை, சாதி அழிப்பு போன்ற உயரிய கொள்கைகளின் அடிப்படையில் பல்வேறு கருத்தரங்குகள், கேள்வி-பதில் அமர்வுகள் நடைப்பெற்றது.

சிறப்பு பேச்சாளர்களில் ஒருவரான எழுத்தாளர் டாக்டர்.வா.கீதா இந்தியாவில் இருந்து வீடியோ பல்வழி அழைப்பின் வழியே “பெரியார் - பொது வாழ்க்கையின் ஒரு முன்மாதிரி” என்ற தலைப்பில் உரையாற்றினார். முதலில் பெரியாரின் அறம் சார்ந்த பகுத்தறிவும் பொது புத்தியும் எப்படி சாதிய-மத வாதிகளின் அறிவிலிருந்து மேம்பட்டது என்பதையும், பெரியார் எப்படி எப்போதும் சமத்துவத்தையும் பகுத்தறிவையும் தன் இருக்கண்களாக கொண்டு சமூக பணியாற்றினார் என்பதையும் விளக்கினார்.

பெரியார் தனது கொள்கை உறுதிக்கு நேர்-எதிராக இருப்பவர்களுடனும் ஒரே மேடையில் அமர்ந்து, அவர்களுக்கு சவால்கள் விட்டு, அவர்களின் சவால்களுக்கும் அறிவார்ந்த பதில் அளித்தார். இந்து மத மடாதிபதி சங்கராச்சாரியர் அவர்களுடனும் ஒரே மேடையில் அமர்ந்து பேசத் தயார் என்று தன் அறம் சார்ந்த கொள்கைப் பிடிப்பை வெளிப்படுத்திய உறுதியாளர். அவரது எழுத்துக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் தாண்டி தற்போது மற்ற இந்திய மொழிகளிலும், குறிப்பாக இந்தி மொழிகளிலும் மொழிப் பெயர்க்கப்பட்டு கொண்டிருப்பது ஒரு வரவேற்ற தக்க நல்ல வளர்ச்சி என்றும் டாக்டர்.வா.கீதா குறிப்பிட்டார். இந்த மொழிப் பெயர்ப்பு முயற்சி, இந்தியாவில் சமீப காலங்களில் வேண்மென்றே கட்டமைக்கப்படும் ஒற்றை கலாச்சார இந்துத்துவ சிந்தனையை சவால் செய்ய கூடிய கருவியாக இருக்கும் என்றார்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கக் காலங்களில் தமிழ் மொழியும் தமிழ் மக்களும் முற்போக்கு கொள்கைகளையும் அறவழியையும் கொண்டிருந்தார்கள். அப்படியான ஒரு தொன்மையை கொண்ட தமிழ்நாடு பெரியார் போன்ற சமூக சீர்திருத்த தலைவர்களை உருவாக்கியதில் அதிசயம் இல்லை என்று மொழி ஆய்வாளரும் வரலாற்று ஆசிரியருமான முனைவர்.மா.சோ.விக்டர் அவர்கள் குறிப்பிட்டார். சங்கக்காலத்திலும், சங்க இலக்கியங்களிலும் “சாதி” என்ற சொல் இல்லை. மேலும் பிறப்பின் அடிப்படையிலான சாதிய ஏற்றத்தாழ்வுகள் கொண்ட குறிப்புகள் இல்லவே இல்லை.

இவையாவும் தமிழர் நிலங்களுக்கு அந்நியமானவை. கி.பி.4-ஆம் நூற்றாண்டுகளுக்கு பிறகு தான் இவை தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தப் பட்டது. அதைத்தொடர்ந்து தமிழகத்தையும் தென்னிந்தியாவையும் ஆண்ட பல்வேறு பெரும் மன்னர்கள் சாதிய வேறுப்பாடுகளை மிக ஆழமாக வளர்த்தெடுத்தார்கள். சாதிய வேறுபாடுகள், சாதியக் கொடுமைகள் கி.பி.19-ஆம் நூற்றாண்டு கால தொடக்கத்தில் தான் முதன்முதலாக அயோத்திதாசப் பண்டிதர் அவர்களால், அவர் நடத்திய “திராவிடம்”, “ஒரு பைசா தமிழன்” போன்ற பத்திரிக்கைகள் மூலமாக தமிழ் மண்ணில் எதிர்ப்பை பதிவுச் செய்தது. அவரின் தொடர்ச்சியாகத்தான் தந்தை பெரியார் சாதியத்திற்கு எதிரான தன் சமூக பணிகளை ஆற்றினார் என்றும் முனைவர். மா.சோ.விக்டர் அவர்கள் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்ற (INFITT) நிறுவன உறுப்பினரும், வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றத்தின் முன்னாள் தலைவரும், மொழியியல் செயல்பாட்டாளருமான திரு. மணி மணிவண்ணன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை உரையாற்றினார். பெரியாரின் தீவிர சமூக நீதி கொள்கைகள் தமிழத்தில் மிகப்பெரிய மாற்றங்களை மக்களின் மனதில் ஏற்படுத்தியது. தனது சொந்த குடும்ப உறவுகளின் உள்ளேயே, வசதி வாய்ப்பில் ஓரளவுக்கு மேல்நிலைக்கு வந்தவர்கள் பெரியாரின் சமூகக் கொள்கைகளை புறம் தள்ளுவதும், நிலத்தில் உழன்று உழைக்கும் உறவினர்கள் பெரியாரை போற்றுவதும் இன்றும் என் கண்முண்ணே நாள் தோறும் நடக்கிறது என்று திரு.மணி உணர்வுப்பூர்வமாக குறிப்பிட்டார்.

பல்வேறு சாதிய அடுக்குகளை கொண்டிருக்கும் இந்திய சமூக அமைப்பில், அடுக்கின் கீழ் என்று சொல்லப்பட்ட மக்கள் தங்கள் விடுதலையை தாங்களே தான் போராடி பெறவேண்டும். அடுக்கின் மேலே இருப்பர்வர்கள் என்று சொல்லுபவர்கள், சாதிய அடுக்கின் கீழே உள்ளவர்களுக்கு விடுதலையை தரமறுப்பார்கள். தோழர். மார்டின் லூதர் கிங் ஜூனியர் சொன்னதை போல் சுதந்திரமும் உரிமையும் கொடுக்கப்படுவதில்லை, அவைகள் எடுக்கப்படவேண்டும் என்றும் மேற்கோள் காட்டி கூறினார். ஒடுக்கப்பட்ட மக்களும் அவர்களின் உரிமைகளை சுதந்திரத்தை அவர்களே வென்றெடுக்க வேண்டும். அதற்கு புரட்சியாளர்.அம்பேத்கர் போன்ற தலைவர்கள், தலித் மக்கள் போன்ற ஒடுக்கப்பட்ட மக்களின் மத்தியில் தோன்றி இன்று பரவலாக சமூகப்பணி ஆற்றி கொண்டிருக்கிறார்கள், அவர்களின் கரங்களை நாம் வலுப்படுத்த வேண்டும் என்றும் கூறினார். சமீபத்திய தெலுங்கானா, தமிழ்நாடு, மற்றும் பிற ஆணவக்கொலைகளை சுட்டிக் காட்டி, தனக்கு பிடித்தவனை கணவனாக தேர்ந்தெடுத்து வாழும் உரிமை பெண்களுக்கு இந்த காலக்கட்டங்களிலும் தொடர்ந்து மறுக்கப்படுகிறது.

அப்படி இருக்கையில், இன்னும் இறுக்கமாக இருந்த அந்த காலக்கட்டத்தில் தந்தை பெரியார் பெண் விடுதலைக்காக எப்படி பாடுபட்டார் என்பதை படித்து அனைத்து சமூக பெண்களும் அவரை போற்றவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அறம் பேணும் சரியான சமூக சீர்திருத்தங்களை மீண்டும் செம்மைப்படுத்தினால், தமிழரின் உண்மையான பெருமை இனிவரும் காலங்களில் தான் வெளிப்படும் என்ற தன் நம்பிக்கையை திரு.மணி மணிவண்ணன் வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து கேள்வி-பதில் நேரத்தில், பல்வேறு பார்வையாளர்கள் பெரியாரின் பகுத்தறிவு கொள்கை, பின்னாளில் திணிக்கப்பட்ட பொய்யும் புராணப்புரட்டும் தாக்கம் கொண்ட தமிழ் மொழியின்பால் பெரியாரின் விமரிசனம், தலித் மக்களின் விடுதலை, பெண்கள் விடுதலைக்கான தீவிர கொள்கை, யார் பெரியாரின் கொள்கைகளை உண்மையான பின்பற்றுபவர்கள், பெரியாரின் நிலத்தில் ஏன் சாதி வன்கொடுமைகள் மற்றும் ஆவனக்கொலைகள் இன்றும் நடக்கிறது போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள்.

நிகழ்ச்சியை திரு.செல்வராஜ் தொகுத்து வழங்க, திரு.சைதன்யா திவாத்கர் அனைவரையும் வரவேற்று பேசினார். பேச்சாளர்களை திரு.கேசவா, திருமதி.இராஜலக்ஷ்மி, திரு.அசுதோஸ் அவர்கள் பார்வையாளர்களுக்கு அறிமுகப் படுத்தினர். திருமதி.சாந்தி கதிரேசன் நன்றியுரையில், கலிபோர்னியா வளைகுடாப் பகுதியில் பெரியாரை ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி மாறி தமிழ் மட்டுமன்றி தமிழ் பேசாத மற்றவர்களுக்கும் பெரியாரின் பகுத்தறிவு மற்றும் சமூகநீதி கொள்கைகளை கொண்டு செல்வதை வெகுவாக பாராட்டினார்.

அம்பேத்கர் கிங் படிப்பு வட்டம் (Ambedkar King Study Circle), அஸோஸியேஷன் ஃபார் இந்தியா டெவெலப்மென்ட் - பே ஏரியா (Association for India’s Development - Bay Area), சான் ஓசே அமைதி மற்றும் நீதி மையம் (San Jose Peace and Justice Center), அம்பேத்கர் அஸோஸியேஷன் ஆப் நார்த் அமெரிக்கா (Ambedkar Association of North America), கபிலர்-பாரி நட்பு படிப்பு வட்டம் (Kapilar-Paari Friendship Study Cirlce), அம்பேத்கர் இன்டர்நேஷனல் சென்டர் (Ambedkar International Center), அமெரிக்கத் தமிழ் வானொலி (America Tamil Radio) மற்றும் அம்பேத்கர் இன்டர்நேஷனல் மிஷன் (Ambedkar International Mission) ஆகிய அமைப்புகள் கூட்டாக இணைந்து இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்ததது. நிகழ்ச்சி அரங்கத்தில் அம்பேத்கர், பெரியார், தலித் விடுதலை, நீட் எதிர்ப்பு, பொருளாதாரம், அமெரிக்கப் பழங்குடியினர் உண்மை வரலாறு போன்று பல்வேறு தலைப்புகளில் வைக்கப்பட்ட புத்தக கண்காட்சி வைக்கப்பட்டது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

You'r reading கலிபோர்னியாவில் பெரியாரின் 140-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் Originally posted on The Subeditor Tamil

More Velinaduval inthiyargal News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை