பிடிக்காவிட்டால் கட்சியை விட்டு வெளியேறுங்கள் - சத்ருகன் சின்காவுக்கு பா.ஜ.க எச்சரிக்கை!

கட்சிக்குள் இருந்து கொண்டே குழப்பம் செய்ய வேண்டாம். பிடிக்காவிட்டால் வெளியேறலாம் என நடிகரும் எம்.பி.யுமான சத்ருகன் சின்காவுக்கு பீகார் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பீகார் மாநிலம் பாட்னா சாகிப் தொகுதி பா.ஜ.க எம்.பி.யாக உள்ளார் சத்ருகன் சின்கா . சமீப காலமாக கட்சியில் இருந்து கொண்டே பிரதமர் மோடியின் பல திட்டங்களை வெளிப்படையாக விமர்சித்து வருகிறார். சமீபத்தில் ராஷ்டிரிய ஜனதாதளத் தலைவர் லாலுவையும் மருத்துவமனையில் சந்தித்தார். இதற்கு பீகார் மாநில பா.ஜ.க. தலைவரும் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா வுடன் சேர்ந்து சத்ருகனும் கட்சிக்குள இருந்து கொண்டே விமர்சனம் செய்கிறார். மத்திய அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தியில் சத்ருகன் உள்ளார். ஏற்கனவே அமைச்சராகவும், நான்கு முறை எம்.பி.யாகவும் ஆனது பா.ஜ.க. தயவில் தான் என்பதை மறந்து விட்டார்.

கட்சிக்குள் இருந்து கொண்டே விமர்சிப்பதை விடுத்து, பிடிக்காவிட்டால் தாராளமாக வெளியேறலாம் என்று சத்ருகன் சின்காவுக்கு சுஷில் குமார் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

More News >>