ஜாக்டோ ஜியோ போராட்டம் : பணிக்கு திரும்பாவிட்டால் தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு - தமிழக அரசு அதிரடி!

போராட்டம் நடத்தும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பணிக்கு வராவிட்டால் சம்பளம் இல்லை என்றும், தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.

நாளைக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் பணியவில்லை. காலவரையற்ற போராட்டம் தொடரும் என ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு நிர்வாகிகள் இன்று திட்டவட்டமாக அறிவித்தனர். இதைத் தொடர்ந்து தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

பணிக்கு வராதவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று எச்சரித்துள்ளது. மேலும் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்யவும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது பள்ளிக்கல்வித்துறை.

More News >>