ஸ்டெர்லைட் திறப்பு தீர்ப்பை நிறுத்தி வைக்கச் செய்த வைகோவின் வாதத்திறமை-மதிமுகவினர் புளகாங்கிதம்!

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் இறுதி தீர்ப்பு பிறப்பிக்க இருந்த நீதிபதிகளின் முடிவை மாற்றியது வைகோவின் வாதம் தான் என மதிமுகவினர் புளகாங்சிதமாக கூறி பாராட்டி வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் இறுதிக்கட்டத்தில் உள்ளது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரசுப்படி ஆலையைத் திறக்க தடையேதும் இல்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டாலும் தமிழக அரசு இன்னும் அனுமதிக்கவில்லை. அரசு ஒத்துழைக்கவில்லை, உரிமத்தை புதுப்பிக்க மறுக்கிறது, மின் சப்ளையும் வழங்காமல்இழுத்தடிக்கிறது, கடிதம் எழுதினால் பதில் இல்லை என உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா குழுமம் மீண்டும் முறையிட்டது.

நீதிபதிகள் பாலி நாரிமன் , நவீன் சின்கா அமர்வில் நேற்று நடந்த விசாரணையில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தாமதம் செய்தால் நாங்களே உத்தரவிட வேண்டி வரும். போலீஸ் துணையுடன் மாவட்ட ஆட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப் போகிறோம் என்றெல்லாம் தமிழக அரசு வழக்கறிஞரை சரமாரியாக விளாசி உள்ளனர். இதுகுறித்து பிற்பகலில் தீர்ப்பு வழங்கப்படும் என்றெல்லாம் நீதிபதிகள் கூறிய நிலையில் தான் வைகோ குறுக்கிட்டாராம்.இந்த வழக்கில் 23 ஆண்டுகளாக தாம் சட்டப் போராட்டம் நடத்தி வருவதைக் குறிப்பிட்டு தீர்ப்புக்கு முன் தமது வாதத்தையும் கேட்க வேண்டும் என்றார்.

பழசையெல்லாம் இப்போது ஏன் கிளறுகிறீர்கள் என நீதிபதிகள் கேட்க, வைகோவோ ஆவேசமாக உரத்த குரலில் பிரச்னைகளை பட்டியலிட்டாராம். வைகோவின் ஆவேசத்தைக் கண்ட நீதிபதிகள், ஏன் நீதிமன்றமே கிடுகிடுக்குமாறு கூச்சலிடுகிறீர்கள் என்று கூறி வைகோ வை சாந்தப்படுத்தி, சரி உங்கள் வாதத்திற்கும் அவகாசம் அளிக்கிறோம். 29-ந் தேதி உங்கள் வாதத்தை எடுத்து வையுங்கள் என்று கூறி விசாரணையை ஒத்தி வைத்தனர்.

இப்படி நேற்றே ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக வர இருந்த தீர்ப்பை தள்ளிப் போட வைத்தது வைகோவின் வாதம் தான் என்றும் 29-ந் தேதியும் வாதத்திறமையால் ஸ்டெர்லைட்டை திறக்க விடாமல் செய்வார் வைகோ என்றும் உற்சாகமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர் மதிமுகவினர் .

More News >>