ராஜீவ் ராணுவத்தின் ஈழப் படுகொலையை இந்தியாவின் மைலாய் என காட்டமாக விமர்சித்த ஜார்ஜ் பெர்னாண்டஸ்!

1989-ம் ஆண்டு தமிழீழத்தின் கலாசார தலைநகரமும் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் பிறந்த இடமுமான வல்வெட்டித்துறையில் அமைதி காக்க சென்ற இந்திய அமைதிப்படை நடத்திய கோரத் தாக்குதலில் 63 அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். உலகையே உலுக்கிய இந்த படுகொலை சம்பவம்.

1989-ம் ஆண்டு ஆகஸ்ட் 2-ந் தேதி இந்திய அமைதிப்படை நிகழ்த்திய கோரத் தாக்குதல் இப்படித்தான் இருந்தது.

- 63 தமிழர்கள் சுட்டும், வெட்டியும், எரித்தும், உயிருடன் கயிற்றால் கட்டி தெருத்தெருவாக இழுத்தும் கொல்லப்பட்டிருந்தனர்.

- 100 பேர் படுகாயமடைந்திருந்தனர். 123 வீடுகள் எரிக்கப்பட்டு நாசமாக்கப்பட்டன.

- வல்வெட்டித்துறை சிவன் கோயில், வல்வை முத்துமாரி அம்மன் கோயில், கப்பலுடையவர் கோயில், ஆதி கோயில் உள்ளிட்டவை எரிக்கப்பட்டிருந்தன.

இன்றளவும் வல்வெட்டித்துறை மக்களால் மறக்க முடியாதது இந்த ‘வல்வைப் படுகொலை’.

இப்படுகொலை நிகழ்த்தப்பட்ட போது கொந்தளித்து எழுந்தவர் இன்று நம்மிடையே மறைந்த போராளி ஜார்ஜ் பெர்னாண்டஸ்.

இதை அமெரிக்க ராணுவமான வியட்நாமின் மை லாயில் நடத்திய இனப்படுகொலையுடன் ஒப்பிட்டு இந்தியாவின் மைலாய்- வல்வெட்டித்துறை என காட்டமாக விமர்சித்தார். அப்போது சர்வதேச அளவில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதே காலகட்டத்தில் பெர்னாண்டஸின் வரிகளுடன் ‘India's My Lai' என்கிற தலைப்பில் வல்வெட்டி கோரப்படுகொலைகளை விவரிக்கும் புகைப்பட புத்தகம் ஒன்று வெளியாகி இந்திய அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இன்றளவும் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட நூலாகவே இருந்து வருகிறது.

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட காலத்தில் இப்புத்தகத்தை வீடுகளில் வைத்திருந்த காரணத்தினாலேயே வேட்டையாடப்பட்டவர்கல் ஏராளம். ஈழத் தமிழர்களின் தனிநாடு விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு தரும் நம்பிக்கைக்குரிய இந்திய தலைவர்களில் ஒருவராக ஒருகாலத்தில் பெர்னாண்டஸும் திகழ்ந்தார் என்பது சரித்திரம்.

More News >>