திருமணம் செய்யுமாறு மகளுக்கு தொல்லை - தட்டிக்கேட்ட தந்தையை கொன்ற இளைஞர்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே திருமணம் செய்யுமாறு மகளுக்கு தொல்லை கொடுத்ததை தட்டிக்கேட்டதால் இளைஞர் தாக்கியதில் தந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே உள்ள ரத்தினக்கோட்டை நரியங்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். கூலி வேலை செய்து பிழப்பை நடத்தி வரும் இவருக்கு சரண்யா என்ற மகள் இருக்கிறார். இதற்கிடையில் இவருடைய மகள் சரண்யாவிற்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்ற இளைஞர் ஒருவர் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனை சரண்யா தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதைக் கேட்ட மகாலிங்கம் ரத்தினக்கோட்டை கடைவீதிக்கு சென்றபோது, அங்கு நின்றிருந்த செல்வத்தைத் தட்டி கேட்டுள்ளார். இனி சரண்யாவை வம்பிழுக்க கூடாது என்ற எச்சரித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பாக மாறியது. அப்போது செல்வம் தாக்கியதில் சரண்யாவின் தந்தை மகாலிங்கம் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் செல்வம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த சரண்யாவின் உறவினர்கள் போராட்டம் நடத்தியதுடன் அறந்தாங்கி போலீசில் புகார் அளித்தனர். உடலை கைப்பற்றி விசாரணை நடத்திய போலீசார், தப்பியோடிய செல்வத்தை தேடி வருகின்றனர்.

 

 

More News >>