அகஸ்டா ஹெலிகாப்டர் ஊழல்: துபாயில் பதுங்கியிருந்த குற்றவாளியை சினிமா பாணியில் கடத்தி வந்த இந்திய உளவுத்துறை!

அகஸ்டா வெஸ்ட்லேன்டு ஹெலிகாப்டர் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட குற்றவாளி ராஜீவ் சக்சேனாவை துபாயில் அந்நாட்டு பாதுகாப்பு படை அதிகாரிகள் உதவியுடன் அதிரடியாக கைது செய்து"ரா" அதிகாரிகள் தனி ஜெட் விமானத்தில் அவசரமாக நாடு கடத்தி இந்தியா கொண்டு வந்தனர்.இந்த அதிரடி நடவடிக்கை சினிமா பாணியில்அரங்கேறியுள்ளது.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல், முறைகேடு நடந்ததாகக் கூறி விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது மோடி அரசு .இந்த விவகாரத்தில் மூளையாகச் செயல் பட்டவர் என்று கூறப்படும் இத்தாலியின் கிறிஸ்டியன் மைக்கேலை கைது செய்து துருவித் துருவி விசாரித்து வருகிறது சிபிஐ . ஊழலில் சோனியா காந்தியின் குடும்பத்திற்கு தொடர்பு இருப்பதாக கிறிஸ்டியன் மைக்கேல் வாக்குமூலம் கொடுத்துள்ளதாகவும் செய்திகள் கசியவிடப் பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஊழலில் மற்றொரு முக்கிய குற்றவாளி என சந்தேகிக்கப்படும் கிறிஸ்டியனின் கூட்டாளி ராஜூவ் சக்சேனா குறித்து துருவித்துருவி விசாரித்ததில் துபையில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இன்று காலை 8 மணியளவில் இந்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் துபையில் அந்நாட்டு போலீஸ் உதவியுடன் ராஜீவ் சக்சேனாவை அதிரடியாக கைது செய்தனர். உடனடியாக தனியார் ஜெட் விமானத்தில் இந்தியாவுக்கும் கொண்டு வந்து விட்டனர்.

ரா அமைப்பின் இந்த அதிரடி கைது நடவடிக்கைக்கு ராஜீவ் சக்சேனாவின் வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சக்சேனாவை, அவருடைய குடும்பத்தினரிடம் பேசக்கூட விடவில்லை. தினமும் உபயோகிக்கும் மருந்து மாத்திரை எடுக்கக் கூட அனுமதிக்காமல் அவசரமாக விமானத்தில் ஏற்றி விட்டனர்.

குற்றவாளிகளை பரிமாற்றும் ஒப்பந்தம் துபை மற்றும் இந்தியா இடையே கிடையாது. இதனை துபை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். ஆனால் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என கைவிரித்து விட்டு, மீதியை இந்திய அரசிடமே கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டதாம். இந்தியப் பிரதமர் மோடி துபை அரசுடன் நல்ல நட்புறவில் உள்ளதால் "ரா"வின் இந்த அதிரடி சினிமா பாணி கைது, நாடு கடத்தல் நடவடிக்கைக்கு அந்நாடு மறைமுக ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகவும் வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

More News >>