இலங்கை சுதந்திர தினத்தை துக்க தினமாக கடைபிடித்த ஈழத் தமிழர்கள்!

இலங்கையின் 71-வது சுதந்திர தினத்தை துக்க தினமாக ஈழத் தமிழர்கள் நேற்று கடைபிடித்தனர்.

இலங்கையின் 71-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு காலி முகத்திடலில் பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. ஆனால் ஈழத் தமிழர்களின் தாயகமான வடக்கி மற்றும் கிழக்கில் சுதந்திர நாளை துக்க நாளாக கடைபிடித்து தமிழர்கள் போராட்டங்களை நடத்தினர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பிரதான கொடிக் கம்பத்தில் கறுப்புக் கொடி பறக்கவிடப்பட்டது. மேலும் பல்கலைக் கழக முன்பக்கத்தில் “எமக்கு எப்போது சுதந்திரம்” என்கிற பதாகை வைக்கப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை அங்கீகரிக்கக் கோரியும், தமிழர்களின் நிலங்களை விடுவிக்கக் கோரியும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய உண்மையை வெளிப்படுத்தக் கோரியும் போராட்டம் நடைபெற்றது.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக போராட்டம் நடத்தப்பட்டது.

முல்லைத்தீவு கேப்பாப்புலவில் 700 நாட்களுக்கு மேலாக நில மீட்புக்கான போராட்டத்தை ஈடுபட்டு வரும் மக்கள், கேப்பாப்புலவு இலங்கை இராணுவ முகாம் முன்பாக கறுப்புக்கொடிகளை பறக்கவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பில், கிழக்குப் பல்கலைக்கழகம் முன்பாக தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

More News >>