பேருந்து கட்டண உயர்வை எந்த காரணம் கொண்டும் ஏற்க முடியாது - திருமாவளவன்

இது தொடர்பாக  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

தற்போது பேருந்துக் கட்டணங்கள் ஏறத்தாழ இரு மடங்காக உயர்த்தப்பட்டிருக்கின்றன. அதற்கு டீசல் விலை உயர்வு காரணமாகக் காட்டப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தபோதிலும் அதற்கேற்ப விலையைக் குறைக்காமல் வரியைப் போட்டுள்ளனர்.

இவர்களால்தான் டீசல் விலை செயற்கையாக உயர்த்தப்பட்டுள்ளது. பேருந்துக் கட்டண உயர்வுக்கு இவர்களால் உயர்த்தப்பட்ட டீசல் விலை உயர்வையே காரணம் காட்டுவது வேடிக்கையாக இருக்கிறது.

ஏழை, எளிய, நடுத்தர வகுப்பு மக்கள்தான் பொது போக்குவரத்தைப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் ஏற்கனவே வி‌ஷமாக ஏறும் விலைவாசி உயர்வால் மூச்சுத் திணறுகிறார்கள். அவர்களின் குரல்வளையை நெரிப்பதுபோல இந்தப் பேருந்துக் கட்டண உயர்வு அமைந்துள்ளது.

பேருந்துக் கட்டண உயர்வால் அனைத்துவிதமான விலைகளும் உயரும். அது வறுமையைக் கூட்டும். இதனால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் அமைப்புசாரா தொழிலாளர்கள்தான்.

இந்தக் கட்டண உயர்வை எந்தக் காரணம் கொண்டும் ஏற்க முடியாது. உடனடியாக இதை முழுமையாகத் திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

More News >>