`யெஸ் அவர் என் அப்பாதான் - விமர்சித்தவர்களை விளாசிய ராதிகா மகள் ரேயான்!

நடிகர்கள் ராதிகா - சரத்குமாரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மோசமாக விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் ரேயான்.

கடந்த 3ம் தேதி நடிகர்கள் ராதிகா - சரத்குமார் திருமண நாளை கொண்டாடினர். அன்றைய தினம் அவர்களது மகள் ரேயான் இருவருக்கும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். ரேயானின் குழந்தைகளை சரத்குமார், ராதிகா இருவரும் வைத்திருந்த புகைப்படத்தை பதிவிட்டு, ``இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்; லவ் பேர்ட்ஸ்" என்று குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகைப்படங்களை வைத்து நெட்டிசன்கள் சிலர் ராதிகா - சரத்குமாரின் தனிப்பட்ட வாழ்க்கைகள் குறித்து மோசமாக விமர்சித்து பதிவிட்டிருந்தனர்.

இந்தப் பதிவுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரேயான், தன்னுடைய ட்விட்டரில் கருத்துகள் தெரிவித்துள்ளார். அதில், ``வழக்கமாக இதுபோன்ற ட்ரோல்களை நான் கண்டுகொள்வதில்லை. இது மாதிரி நான் நிறைய பார்த்திருக்கிறேன். நான் சிறு வயதாக இருந்தது முதல், வளர்ந்த பிறகு, என் திருமணம் நடந்தபோது, ஏன் தற்போது குழந்தைப் பிறந்தபோதுகூட இது மாதிரியான ட்ரோல்களை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

சிங்கிள் பேரண்டாக கையில் கைக் குழந்தையுடன் சினிமா, பிசினஸ் என்று என் அம்மாவின் போராட்டமும் அதன் வெற்றிகளும் சாதாரணமான சம்பவங்கள் கிடையாது. நிச்சயம் என் அம்மா ஒரு சூப்பர் பெண்மணி. இன்னொருவருடைய குழந்தையையும் நேசிக்கும் மனம் யாருக்கு வருகிறதோ அதுவே உண்மையான அன்பு. அந்தவகையில் என் அப்பா ஒரு ரியல் மேன். அவர் என் அப்பா. யெஸ் அவர் என் அப்பாதான். நீங்கள் சொல்வது போல என் அப்பா ஒரு ஆசிர்வதிக்கப்பட்டவர். நல்ல மனைவி, நான்கு குழந்தைகள், ஒரு பேரன் என ஒரு அழகான குடும்பம் அவருக்கு இருக்கிறது.

ரத்த சம்பந்தம் இருந்தால் மட்டும் அது குடும்பம் கிடையாது. நாம் எப்படி இருக்கிறோமோ அதை ஏற்றுக்கொள்வது குடும்பம் தான். யெஸ் நாங்கள் மிக்ஸ்டு குடும்பம் தான். இந்தக் குடும்பத்தில் நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம். வலிமையாக உணர்கிறோம். எங்கள் குடும்பம் பற்றி ஒருநாள் உங்களுக்கு நிச்சயம் புரியும். வெறுப்புக்குப் பதில் அன்பை பரப்புவோம்" என்று விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

More News >>