`எப்படியும் மூணு மாசம் ஜெயில் தான் துணி எடுத்துட்டு வரட்டா? - போலீசை அதிரவைத்த சந்தியாவின் கணவர்

சென்னையில் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சந்தியா கணவர் பாலகிருஷ்ணன் போலீஸில் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இந்தக் கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சென்னையில் சேகரிக்கப்படும் குப்பைகள் பெருங்குடி குப்பைக் கிடங்குக்கு கொண்டுவரப்படும். ஜனவரி மாதம் 20-ம் தேதி அப்படி லாரியில் கொண்டுவரப்பட்டு கொட்டப்பட்ட குப்பையில் இளம்பெண்ணின் கை, கால்கள் மட்டுமே பார்சல் செய்யப்பட்டுக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்த பள்ளிக்கரணை போலீஸார் விசாரணை நடத்தினர். 30-லிருந்து 35 வயது மதிக்கத்தக்க அப்பெண்ணின் கையில் இரண்டு இடங்களில் பச்சை குத்தப்பட்டிருந்தது. டாட்டூவை வைத்துப் பார்க்கும்போது அப்பெண் வசதியானவர் என்று போலீஸார் கருதினர். கால்களில் மெட்டி உள்ளதால் திருமணமான பெண் என கருதினர்.

நீண்ட இழுபறிகளுக்கு பிறகு இறந்த பெண்ணின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. உடல் பாகங்களில் இருந்த டாட்டூ மூலமாக அவர் யார் என போலீஸார் அடையாளம் கண்டனர். அதன்படி, இறந்தவர் தூத்துக்குடியைச் சேர்ந்த சந்தியா என்பதும், கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறால் சந்தியாவின் கணவர் எஸ்.ஆர்.பாலகிருஷ்ணனே அவரை கொலை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. சந்தியாவின் கணவர் ஒரு சினிமா இயக்குநர் என்பதும், காதல் இலவசம் என்ற தமிழ் திரைப்படத்தை தயாரித்து இயக்கி வெளியிட்டுள்ளார் என்றும் அறியப்பட்டது. உடனடியாக பாலகிருஷ்ணனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி சந்தியாவின் உடல்பாகங்களை கைப்பற்றி வருகின்றனர். இதுவரை இடுப்புப் பகுதி, மேலும் ஒரு கை கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் அவரின் தலையை போலீசார் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே, போலீசார் கைது செய்யும் போது எந்தவித சலனமும், குற்ற உணர்வும் இல்லாமல் பாலகிருஷ்ணன் நடந்துகொண்டுள்ளார். சந்தியாவின் அடையாளம் தெரிந்ததும் அவர் கணவரின் வீடான ஜாபர்கான் பேட்டைக்கு போலீசார் விரைந்துள்ளனர். அங்கு சென்று அவரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யும் போது ``எப்படியும் மூணு மாசம் ஜெயில்ல இருக்க வேண்டி இருக்கும். அதனால நான் என்னோட துணிகளை எடுத்துட்டு வரேன்" என அசால்ட்டாக கூறி போலீசாரை அதிரவைத்துள்ளார். கூறியதுபோலவே துணிகளையும் எடுத்துக்கொண்டே சிறைக்கு சென்றுள்ளார். அதேபோல் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட போதும், செய்தியாளர்கள் புகைப்படம் எடுத்ததற்கு `என்னை ஏன் போட்டோ எடுக்கறீங்க? என்னை சுத்தி சுத்தி வராதீங்க" எனக் கூச்சல் போட்டுள்ளார்.

More News >>