`சீமானின் ஆட்கள் தான் வெட்டினர் - ரத்தம் சொட்ட சொட்ட வீடியோ வெளியிட்ட ரஜினி ரசிகர்!
சீமானின் நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் தன்னை அரிவாளால் வெட்டியதாக சேலத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
சேலத்தைச் சேர்ந்தவர் ரஜினி பழனி. தீவிர ரஜினி ரசிகரான இவர் நெட்டிசன்கள் மத்தியில் குறிப்பாக நாம் தமிழர் கட்சியினர் மத்தியில் ஏக பிரபலம். ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்ததில் இருந்து அவரை எதிர்த்து வருபவர் சீமான். பல மேடைகளில் ரஜினி குறித்து விமர்சனம் செய்து வருகிறார் சீமான். இவரின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சமூக வலைதளங்களில் சீமானை ஒற்றை ஆளாக வறுத்தெடுத்து வந்தவர் தான் இந்த சேலத்தைச் சேர்ந்த ரஜினி பழனி. இதனால் சீமானின் அன்பு தம்பிகளின் எதிர்ப்புகளை சம்பாதிக்க தொடங்கினார் ரஜினி பழனி. ஆனாலும் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் ரஜினியை சீமான் விமர்சனம் செய்யும் போதல்லாம் தவறாமல் அவரை விமர்சித்து பேசி அதனை வீடியோவாக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்.
இதற்கிடையே, இன்று காலை தனது வீட்டிலிருந்து வெளியே சென்ற போது ரஜினி பழனியை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டியுள்ளனர். முகம், கழுத்து பகுதியில் சரமாரியாக வெட்டு விழுந்தது. இந்த வெட்டுக்காயங்களுடன் ரத்தத்துடன் ரத்தமாக ரஜினி பழனி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சீமானின் ஆட்கள் தான் தன்னை வெட்டியதாக ரத்தம் சொட்ட சொட்ட பேசியுள்ளார். தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.