மோடி 6000 ரூபாயாம் ... எடப்பாடி ரூ.2000 கொடுக்கிறாராம்...! மஞ்சப்பை, பேப்பர்களுடன் அலைபாயும் மக்கள்!

மக்களவைத் தேர்தல் வந்தாலும் வரப்போகிறது, தமிழக மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் என்ற பெயரில் அறிவித்துள்ள பணத்தை வாங்க கையில் பட்டா, சிட்டா , ஆதார், ரேசன் கார்டு ஜெராக்ஸ் பேப்பர்களுடன் அரசு அலுவலகங்களில் அலைமோதுகின்றனர்.

பொங்கலுக்கு தமிழக அரசு 1000 ரூபாய் கொடுத்தது. இதை வாங்க ஒரு வாரமாக மக்கள் ரேசன் கடைகளில் ஒரு வாரமாக தவமிருந்தனர்.

தற்போது மக்களவைத் தேர்தல் நெருக்கத்தில் மத்திய அரசும், மாநில அரசும் போட்டி போட்டு நிவாரணம் வழங்குவதாக அறிவிப்பு செய்துள்ளன. 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் அனைவருக்கும் 6 ஆயிரம் ரூபாய் என மத்திய அரசும், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள தொழிலாளர்களுக்கு ரூ. 2000 என தமிழக அரசும் அறிவித்து அதற்கான விண்ணப்ப வினியோகமும் ஜரூராக நடக்கிறது.

தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன்பே அவரவர் வங்கிக்கணக்கில் வரவு வைத்து மக்களைக் கவர்ந்து விட மத்திய, மாநில அரசுகள் ஜரூராக பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

இதனால் வேறு வேலைகளை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு இந்த இனாம் தொகையைப் பெற தமிழகம் முழுவதும் மக்கள் கடந்த சில நாட்களாக அலைபாயத் தொடங்கி விட்டனர். விவசாய நிலம் வைத்திருப்பவர்கள் அதற்கான பட்டா, சிட்டா ஆவணங்களை நகல் எடுப்பதும், ஆதார், ரேசன், வங்கிக்கணக்கு புத்தகங்களை நகல் எடுப்பதுமாக எங்கு பார்த்தாலும் மஞ்சப்பையுடன் அலைபாய்கின்றனர்.

தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை 'ஐஸ்' வைக்க இன்னும் என்னென்ன இனாமாக கிடைக்கும் என்பதே இப்போது தமிழக மக்களிடையே விவாதப் பொருளாகி விட்டது.

More News >>