கலைப்புலி தாணு போட்ட உத்தரவு! மீண்டும் இணையும் கெளதம் - சூர்யா கூட்டணி!

கெளதம் மேனன் - நடிகர் சூர்யா கூட்டணி மீண்டும் இணையவுள்ளது என கோடம்பாக்கம் வட்டாரம் முணுமுணுக்கிறது.

நடிகர் சூர்யாவுக்கு ஆக்ஷன் ஹீரோ பிளஸ் கமர்ஷியல் ஹீரோ என்ற அந்தஸ்து உருவாக காரணமானவர் இயக்குனர் கெளதம் மேனன். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக இன்றைக்கு சூர்யா வலம் வருவதற்கு காக்க காக்க, வாரணம் ஆயிரம் என இரண்டு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உதவியவர் கெளதம் மேனன் என்றால் மிகையாகாது. துருவ நட்சத்திரம் படத்தின் கதை விஷயத்தால் ஏற்பட்ட மனக்கசப்பால் சூர்யா - கெளதம் மேனன் கூட்டணி பிரிந்தது. இந்த பிரச்சனையின் போது இருவரும் மாறி மாறி அறிக்கைவிட்டுக் கொண்டது தமிழ் திரையுலகில் ரசிகர்கள் வட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இருப்பினும் இந்தக் கூட்டணி மீண்டும் இணையாதா என தயாரிப்பாளர்கள் முதல் ரசிகர்கள் வரை காத்துகொண்டு தான் இருக்கின்றன.

இப்படியான நிலையில் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் விரைவில் ஒரு நல்ல செய்தி கிடைக்கும் என்கிறது கோடம்பாக்கம் வட்டாரம். இதனை உறுதியாக்கும் வகையில் காக்க காக்க படத்தைத் தயாரித்த கலைப்புலி தாணுவே, இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தைத் தயாரிக்க முடிவு செய்து, இயக்குனர் கெளதம் மேனனிடம் கதை தயார் செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளார். முதல் பாகத்தில் நடித்த சூர்யா, ஜோதிகாவே மீண்டும் இந்தப் படத்தில் ஜோடி சேர்ந்து நடிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திருமணத்துக்கு பின் ஜோதிகா பல படங்களில் தற்போது நடித்து வந்தாலும் இன்னும் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்கவில்லை. இந்த ஏக்கமும் காக்க காக்க 2 வில் நடக்கும் என்கிறார்கள் கோடம்பாக்கத்தினர். இதனால் சூர்யா - கெளதம் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மீண்டும் ஒரு சூப்பர் ஹிட் கொடுக்க இந்தக் கூட்டணி இணைய வேண்டும் என நாமும் வாழ்த்துவோம்.....

More News >>