`அம்மா சத்தியமா கொடுத்துறேன் - வாடிக்கையாளரால் நொந்துபோன ஜொமேட்டோ கஸ்டமர்கேர் ஊழியர்!

உணவை நாம் தேடிச்சென்ற காலம் போய் இப்போது, உணவுதான் நம்மைத் தேடிவருகிறது. ஹோட்டல்களில் இருந்து உணவுகளை, டோர் டெலிவரி செய்யும் பணிகளில் ஸ்விக்கி, ஜொமேட்டோ, உபர் ஈட்ஸ் போன்ற நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களின் ஊழியர்கள் இல்லாத சாலைகளே இல்லை என்ற சூழ்நிலை உருவாகி வருகின்றன. கவர்ச்சிகரமான ஊதியம் என்பதால், முழு நேரம், பகுதி நேரம் என்று ஏராளமானோர் இந்த நிறுவனங்களில் பணியாற்றி தொடங்கினர். ஆனால் காலப்போக்கில் சம்பளம், படிகள் குறைக்கப்படவே இந்த ஊழியர்கள் இப்போது கஷ்டத்தில் உள்ளதாக புலம்பி வருகின்றனர். இருப்பினும் வேலையில்லாமல் திண்டாடுவதுக்கு கிடைப்பதை வைத்து வாழ்வது மேல் எனக் கூறி இவர்கள் வேலை செய்து வருகின்றனர்.

அப்படி வேலை செய்யும் இடத்திலும் நிறைய பிரச்னைகளை இவர்கள் சந்தித்து வருகின்றனர். மன அழுத்தம், விரைவாக டெலிவரி செய்ய சொல்லி டார்ச்சர் இப்படி ஏரளமான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஜொமேட்டோ கஸ்டமர் கேர் ஊழியரின் சாட் ஒன்று வைராலகியுள்ளது. ஹரியானா மாநிலம் குர்கானை சேர்ந்த முனிஷ் பன்சால் என்பவர் நேற்று ஜொமேட்டோவில் உணவு ஆர்டர் செய்துள்ளார். இதற்கான ஆன்லைன் மூலமாக பணமும் செலுத்தியுள்ளார். ஆனால் சில கோளாறு காரணமாக அவர் ஆர்டர் கேன்சல் ஆகியுள்ளது. உடனே கஸ்டமர்கேரை தொடர்பு கொண்டு ஆர்டர் கேன்சல் ஆன விஷயத்தைச் சொல்லி இருக்கிறார்.

அவரின் புகாரை பரிசோதித்த ஜொமேட்டோ கஸ்டமர் கேர் ஊழியர், ``தொழில்நுட்ப கோளாறு இருக்கிறது. எனவே நீங்கள் புதிய ஆர்டர் செய்துகொள்ளுங்கள்" எனக் கூற ``அப்போ நான் செலுத்திய பணம் எப்போது கிடைக்கும்" பன்சால் கேட்டுள்ளார். அதற்கு நாலு ஐந்து நாட்களில் திருப்பி செலுத்திவிடுகிறேன் என ஊழியர் கூறியுள்ளார். ``அப்படி செலுத்தவில்லை என்றால் என்ன செய்வது?" என பன்சால் கேட்க ``அம்மா சத்தியமாக பணத்தை செலுத்திவிடுகிறேன்" என அந்த கஸ்டமர் கேர் ஊழியர் கூறி சமாளித்துள்ளார். இந்த உரையாடல்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட பன்சால் கஸ்டமர் கேரின் நிலை இப்படி தான் இருக்கிறது எனக் கூறியுள்ளார். இந்தப் பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது.

More News >>